எக்ஸ்க்ளூசிவ் இண்டர்வியூ கேட்டு மீடியா டார்ச்சர்.. வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி கதறல்!
டெல்லி: உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாடு திரும்பிய இந்திய வில்வித்தை அணி டெல்லி விமான நிலையத்தில் மீடியாக்களின் டார்ச்சரால் கதறி அழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
போலந்து நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, லைஷ்ராம் பாம்பேலா தேவி, ருமில் புருயிலி ஆகியோர் அடங்கிய அணி தங்கம் பதக்கம் வென்றது. பதக்கத்துடன் நாடு திரும்பிய வில்வித்தை அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் இந்திய வில்வித்தை சங்கத்தின் செயலர் விஜய்குமார் மல்ஹோத்ரா வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
இதைத் தொடர்ந்துதான் சோதனை நடந்தேறியது. அங்கு குழுமியிருந்த முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களின் செய்தியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு எக்ஸ்குளூசிவ்வாக பேட்டியளிக்க வேண்டும் என்று தீபிகாகுமரி உள்ளிட்டோரிடம் வலியுறுத்தினர் .ஆனால் அவர்களோ தாங்கள் சோர்வாக இருப்பதாகவும் மற்றொரு விமானத்தை பிடிக்க வேண்டும் என்றும் சொல்லிப் பார்த்தனர். இதனால் அனைவருக்கும் மொத்தமாக பேட்டி கொடுத்துவிடுகிறோமே என்றும் கூறினர்.
ஆனால் மீடியாக்கள் விடுவதாக இல்லை.. மீண்டும் மீண்டும் டார்ச்சர் செய்ய என்ன செய்வது எனத் தெரியாமல் கண்ணீர்விட்டு அழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன தங்கப் பதக்கம் வென்ற வீரர்கள்!