இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத் தலைவன் யாசின் பட்கல் நேபாளத்தில் கைது
டெல்லி: பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல். தேசிய புலனாய்வு நிறுவனத்தின் தேடப்பட்டவர்கள் பட்டியலில் இருந்தார்.
நூற்றுக்கணக்கானோர் பலியாக காரணமாக இருந்த பட்கல் கடந்த 2008ம் ஆண்டு இந்திய போலீசாரின் கைகளில் இருந்து நழுவினார். இந்நிலையில் அவரை நேபாளில் வைத்து தேசிய புலனாய்வு நிறுவனத்தார் இன்று கைது செய்துள்ளனர்.
டெல்லி மற்றும் கர்நாடக போலீசார் கொடுத்த தகவல்களை வைத்து தான் பட்கல் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்கல் குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டெல்லி போலீசார் அறிவித்திருந்தனர். இதையடுத்து பட்கல் குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் மகாராஷ்டிராவைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு இயக்கம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.