அஸ்ரம் பாபுவுக்கு சிறப்புச் சலுகை தர வேண்டாம் - ராஜஸ்தானுக்கு மத்திய அரசு
டெல்லி: பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அஸ்ரம் பாபுவுக்கு சிறப்புச் சலுகை ஏதும் தரக்கூடாது என ராஜஸ்தானுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வருபவர் அஸ்ரம் பாபு.
இங்கு தங்கிப் படித்து வந்த உத்தர பிரதேச சிறுமிக்கு அஸ்ரம் பாபு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கூறப்பட்டது.
அதன் அடிப்படையில் ஜோத்பூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அஸ்ரம் பாபு மறுத்துள்ளார்.

இந்நிலையில், அஸ்ரம் பாபுவுக்கு ஜோத்பூர் காவலர்கள் விசாரணைக்கான சம்மனை அனுப்பினர். இதை அவரிடம் நேரடியாகத் தராமல், அகமதாபாத்திலுள்ள அவரது பிரதிநிதியிடம் தந்து, 4 நாட்கள் அவகாசமும் அளித்துள்ளனர்.
6 மணி நேரம் காத்திருப்பு
ஆனால் இதை அஸ்ரம் பாபு கண்டு கொள்ளவில்லை. திரும்ப ஒரு சம்மனை நேரில் தர ஆசிரமத்துக்கே காவலர்கள் சென்றனர்.
அஸ்ரம் பாபு தவத்தில் இருக்கிறார் என்று போலீசாரை சுமார் 6 மணி நேரம் ஆசிரம நிர்வாகிகள் காத்திருக்க வைத்தனர். அதன் பின்னர், அஸ்ரம் பாபுவைச் சந்தித்த காவலர்கள், அவரிடம் சம்மனை வழங்கினர்.
வரும் 30ம் தேதி போலீசாரின் முன் விசாரணைக்கு அஜராக வேண்டும் என்று சம்மனில் கூறப்பட்டிருந்தது.
சம்மனை பெற்றுக்கொண்ட அஸ்ரம் பாபு, தனக்கு அடுத்த மாதம் 19ம் தேதி வரை ஏற்கனவே திட்டமிடப்பட்ட வேலைகள் உள்ளதால் அதன் பிறகு விசாரணைக்கு ஆஜராவதாக தெரிவித்தார். காவலர்களும் திரும்பிச் சென்றனர்.
கைது செய்யுங்கள்
இன்று ஜோத்பூரில் உள்ள அவரது ஆசிரமத்தின் முன்பு கூடிய பலர் இளம்பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரத்தில், சாமியாரைக் கைது செய்து, சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு அறிவுறுத்தல்
இந்நிலையில், அஸ்ரம் பாபுவுக்கு ராஜஸ்தான் மாநில அரசு எவ்வித சலுகையும் வழங்கக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, ராஜஸ்தான் அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஒரு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளது. 'சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது என்பது மாநில அரசு சம்பந்தப்பட்ட விவகாரமாக இருந்த போதிலும், சட்டத்தை சரியான வகையில் நிலைநாட்டுவதில் எவ்வித விதி விலக்கும் இருக்க கூடாது என மாநில அரசுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம்.
கற்பழிப்பு வழக்கில் குற்றச் சாட்டுக்குள்ளான மற்றவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை மட்டுமே ஆசாராம் பாபுவுக்கு வழங்க வேண்டும். அவருக்கு எவ்வித சிறப்பு சலுகையையும் மாநில அரசு வழங்கக் கூடாது' என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications