கேரளா ஐஸ்கிரீம் பார்லர் விபசார வழக்கு.. சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!
திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கிய கோழிக்கோடு ஐஸ்கிரீம் பார்லர் விபசார வழக்கில் சிபிஐ விசாரணை கோரி முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
கோழிக்கோட்டில் உள்ள ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றில் கடந்த 1997ல் இளம்பெண்களை கடத்தி வந்து விபசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் தற்போது தொழில் துறை அமைச்சராக இருக்கும் பி.கே.குஞ்சாலிகுட்டி உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த வழக்கில் குஞ்சாலிகுட்டியின் உறவினரான ரவூப் என்பவர்தான் முக்கிய குற்றவாளி என்றும் கூறப்பட்டது. இதனால் ரவூப்புக்கு ஆதரவாக இருந்த டிஐஜி ஸ்ரீஜித் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஐஸ்கிரீம் பார்லர் விபசார வழக்கில் சிபிஐ விசாரணை கோரி 2வது முறையாக கேரள உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை இன்று கேரள உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இது தொடர்பாக அணுகுமாறும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏற்கெனவே 2011ஆம் ஆண்டு இதேபோல் சிபிஐ விசாரணை கோரி அச்சுதானந்தன் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.