ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற மேலும் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற மேலும் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
காஷ்மீரின் மத்திய பகுதியான கண்டர்பெல் மாவட்டத்தின் பிரெங் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ராஷ்டிரீய ரைபிள் படையினர் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அங்குள்ள கங்கன், நஜ்வன் காட்டுப்பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 5 பேர் அங்கே மறைந்திருந்தது தெரிய வந்தது. உடனே பாதுகாப்பு படையினர் அவர்களிடம் சரணடையுமாறு கூறினர். ஆனால் சரணடைய மறுத்த அவர்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினர். இதில் 5 தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர்.
இதனிடையே இன்று காஷ்மீரின் தாங்தர் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் கும்பலை ராணுவத்தினர் தடுத்து எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் எச்சரிக்கையை மீறி ஊடுருவ முயன்றதால் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 தீவிரவாதிகள் பலியாகினர்.