ஜம்மு காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல்- இந்திய வீரர் படுகாயம்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பிரதேசத்தில் கடந்த 6-ந்தேதி பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த 27-ந்தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் இந்திய பகுதிகளில் நாள்தோறும் தாக்குதல் நடத்தி வந்தது.
30 முறை தாக்குதல்கள்
கடந்த ஒரு மாத காலத்தில் 30 முறை நடந்த இந்த தாக்குதல்களுக்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வந்தனர். இதனால் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.
2 நாள் அமைதி
இதனிடையே கடந்த 27-ந்தேதி மாலை 3.15 மணி முதல் நேற்று இரவு 11.30 மணி வரை பாகிஸ்தான் ராணுவம் எந்தவித தாக்குதலும் நடத்தாதால் எல்லையில் அமைதி நிலவியது.
மீண்டும் தாக்குதல்
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் பல்லன்வாலா அருகே பட்வல் பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கிகளாலும், தானியங்கி ஆயுதங்களாலும் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. இந்த சண்டையில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்திய வீரர் படுகாயம்
மேலும் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பல்லன்வாலா அருகே உள்ள அக்னூர் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராஜ்புத் ரைபிள் படைவீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். உடனே இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது.
இதனால் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.