மக்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது - தூத்துக்குடி கலெக்டர்
தூத்துக்குடி: பொதுமக்கள் சட்டத்தை தங்களது கையில் எடுத்துக் கொண்டு தனக்குத்தானே நீதிபதிகள் போல செயல்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தூத்துக்குடி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரவிக்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர் ரவிக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...
தூத்துக்குடி மாவட்ட கடல்தாது மணல் குவாரிகளில் மணல் எடுப்பதற்கு கடந்த மாதம் 8ம் தேதி முதல் தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், தாதுமணலை ஏற்றுமதி செய்ய தடை உத்தரவு பிறபிக்கப்படவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியதாழையில் பொதுமக்களால் சிறை பிடிக்கப்பட்ட கடல்தாது மணல் ஏற்றிவந்த லாரி நெல்லை மாவட்டத்தில் இருந்து தாது மணல் ஏற்றி வந்துள்ளது. இந்த லாரியை விடுவிப்பது தொடர்பாக எனது தலைமையில் வருவாய்த்துறை, கனிமவளம், காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணப்பட்டுள்ளது.
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்கலாம் அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் பொதுமக்கள் சட்டத்தை தங்களது கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது. இதுமட்டுமின்றி சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நாம் தாம் எல்லாம் என தனக்குத்தானே நீதிபதிகள் போல செயல்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
லாரியில் 24டன்னுக்கு பதிலாக 41டன் என அளவுக்கு அதிகமாக தாது மணல் ஏற்றி வரப்பட்டுள்ளது, தொடர்பாக சம்மந்தப்பட்ட லாரி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் அமைந்துள்ள டி.சி.டபிள்யூ. தொழிற்சாலையின் ரசாயனக் கழிவுகள் உப்பள நிலங்களில் சேமித்து வைக்கப்படுகிறது.
இந்த கழிவுகள் அனைத்தும் உப்பள நிலங்களில் கலந்து உப்பு சிகப்பு நிறமாக மாறி உணவிற்கு பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்திட திருச்செந்தூர் ஆர்.டி.ஓ தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகளைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட தாரங்கதாரா கெமிக்கல் தொழிற்சாலையால் உப்பளங்களில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது உறுதியாக தெரியவந்தால், அந்த நிறுவனத்தின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அதன்பின்னர் கலெக்டர் ரவிக்குமார், சென்னையில் நடைபெற்ற அகிலஇந்திய ஸ்குவாஷ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவி பிருந்தா மற்றும் அகில இந்திய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் விளையாடுவதற்கு தேர்வு பெற்ற தூத்துக்குடி புனித லசால் பள்ளி மாணவர் யூஜின்சிம்போரி ஆகியோரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.












Click it and Unblock the Notifications