ஒருதலைக்காதல்: பள்ளி வகுப்பறைக்குள் மாணவியை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர்
அமேதி: உத்தரபிரதேசத்தில் ஒருதலையாக காதலித்த இளைஞன் ஒருவன் தன்னை காதலிக்க மறுத்த மாணவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமேதி அருகிலுள்ள கிரிதாரிபுர்வா கிராமத்தை சேர்ந்தவன் துர்கேஷ் (19). இதே பகுதியில் வசிக்கும் 15 வயது மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தான்.
அவனது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த மாணவி, துர்கேஷ் தன்னை பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் பின்தொடர்ந்து வந்து தொல்லை தருவதாக பெற்றோரிடம் புகார் அளித்தார். அவர்கள் துர்கேஷை அழைத்து கண்டித்தும் அவனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
நேற்று காலை சுமார் 8 மணியளவில் மாணவியின் வகுப்பறைக்கு 2 நாட்டு துப்பாக்கிகளுடன் துர்கேஷ் சென்றான். மாணவியின் கையை பிடித்து இழுத்து, 'வா... வெளியே போகலாம்' என்று அழைத்தான்.
இதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே துப்பாக்கியை எடுத்து சரமாரியாக மாணவியை நோக்கி துர்கேஷ் சரமாரியாக சுடத் தொடங்கினான்.
வகுப்பில் இருந்த ஆசிரியரும், இதர மாணவிகளும் அலறியபடி வெளியே ஓடத் தொடங்கினர். உடலின் பல இடங்களில் குண்டு பாய்ந்த நிலையில் அந்த மாணவி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
அந்த பள்ளியில் பணியாற்றும் இதர ஆசிரியர்களும், காவலர்களும் துர்கேஷை பிடிக்க பாய்ந்தனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் தனது நெற்றிப்பொட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட துர்கேஷ், சம்பவ இடத்திலேயே பிணமானான்.
குண்டடிபட்ட மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் லக்னோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக அமேதி போலீஸ் சூப்பிரண்ட் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.