மும்பை கற்பழிப்பு வழக்கு: மைனரை அடையாளம் காட்டிய பெண் நிருபர், நண்பர்
மும்பை: மும்பையில் உள்ள சக்தி மில்ஸ் பகுதியில் கற்பழிக்கப்பட்ட பெண் பத்திரிக்கை புகைப்படக்காரர் தன்னை சீரழித்தவர்களில் ஒருவரான மைனரை அடையாளம் காட்டினார்.
கடந்த 22ம் தேதி மும்பை சக்தி மில்ஸ் வளாகத்தில் 22 வயது பெண் பத்திரிக்கை புகைப்படக்காரர் மைனர் உள்பட 5 பேரால் கற்பழிக்கப்பட்டார். அவருடன் வந்திருந்த ஆண் நண்பரை அந்த 5 பேரும் கட்டி வைத்து அடித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் முதல் ஆளாக அந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
அந்த சிறுவன் இது போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் தன்னை சீரழித்த அந்த சிறுவனை அப்பெண் அடையாளம் காட்டினார். அவருடையை ஆண் நண்பரும் அவனை அடையாளம் காட்டினார்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி சக்தி மில்ஸில் வைத்து தன்னை 5 பேர் கற்பழித்ததாக 18 வயது பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த 5 பேரில் 3 பேர் பத்திரிக்கைக்கார பெண்ணை கற்பழித்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2 பேரில் ஒருவரான மைனர் நேற்று கைது செய்யப்பட்டான். மேலும் ஒருவன் இன்னும் போலீசாரிடம் சிக்காமல் உள்ளான்.