காவிரி படுகையில் கர்நாடக அரசை எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்த விடாதீர்கள்: ஜெயலலிதா

இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
கர்நாடக மாநில அரசின் நிறுவனமான 'காவிரி நீர்வாரி நிகமா லிமிடெட்' எனும் நிறுவனம் அர்காவதி நதியை சீரமைத்து புதுப்பொலிவு ஏற்படுத்தவும் ஹேமாவதி நதி கால்வாய்களை நவீனப்படுத்தவும் பணிகளை மேற்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில் ஹேமாவதி நதியின் இடது கரை கால்வாய், வலது கரை கால்வாய் மற்றும் வலது கரை உயர் மட்ட கால்வாய்களை நவீனப்படுத்துவது பற்றி கூறப்பட்டுள்ளது.
தேசிய நீர் பாதுகாப்பு மாவட்டம், தேசிய நீர் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த திட்டங்கள் நடப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஹேமாவதி கால்வாய்களை நவீனப்படுத்த நீர்ப்பாசன திட்டத்தின் உதவியை பெற உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அர்காவதியை சீரமைக்கும் திட்டமும், ஹேமாவதி கால்வாய்களை நவீனப்படுத்தும் திட்டமும் கர்நாடக அரசின் புதிய திட்டங்களாகும். இந்த திட்டங்களின் செயல்பரப்பு நோக்கம் என்ன என்று தெரியவில்லை. மேலும் ஹேமாவதி கால்வாய்களை நவீனப்படுத்துவதன் மூலம் கர்நாடகா அரசு எடுக்கும் தண்ணீர் அளவு கணிசமாக அதிகரிக்கும். இதன் மூலம் காவிரி நதிநீர் ஆணையம் இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதைவிட கூடுதல் ஆயக்கட்டு பணிகளை கர்நாடகம் விரிவுபடுத்த முடியும்.
கர்நாடக அரசின் இந்த புதிய திட்டங்கள் காரணமாக காவிரியில் இயற்கையாக வரும் தண்ணீர் அளவில் பாதிப்பு ஏற்படும். இது தமிழக நீர்ப்பாசனத் திட்டங்களை மிகக் கடுமையாக பாதிக்கும். எனவே இது காவிரி நதி நீர் ஆணையத்தின் இறுதி உத்தரவுக்கு எதிரானது. காவிரி இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதை கண்காணிக்க தற்காலிக குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நிலையில் காவிரி இறுதித் தீர்ப்பை மீறும் வகையில் கர்நாடக மாநில அரசு நடந்து கொள்வது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கர்நாடக அரசு காவிரியில் புதிய திட்டங்கள் செயல்படுத்துவதை அனுமதிக்க கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை கர்நாடகா எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்த கூடாது என்று தடுக்க வேண்டும். மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும் என்று மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன். அதோடு காவிரி இறுதி உத்தரவை திறமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தாங்கள் உத்தரவிட கேட்டுக்கொள்கிறேன்.
காவிரி இறுதி தீர்ப்பை கர்நாடக அரசு அடிக்கடி மீறாத வகையில் இருப்பதை உறுதி செய்வதற்கு, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை கர்நாடகா அரசு காவிரி படுகையில் எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க கூடாது. இதில் நீங்கள் தலையிட்டு கர்நாடக அரசுக்கு அறிவுரை கூற வேண்டும்.
மேலும் அர்காவதி நதி சீரமைப்பு திட்டத்தையும் ஹேமாவதி கால்வாய்களை நவீனப்படுத்தும் திட்டங்களையும் நிறுத்தி வைக்குமாறு காவிரி நீர்வாரி நிகமா லிமிடெட் நிறுவனத்துக்கு அறிவுரை வழங்கும்படி கர்நாடக மாநில அரசை கேட்டுக் கொள்ளலாம். ஆகையால் காவிரி நிர்வாக வாரியத்தையும், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையத்தையும் விரைவில் அமைக்க கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications