ம.பியில் ஆட்சியை பிடிக்க மோடியை காப்பியடிக்கும் காங்கிரஸ்!: ஜோதிராதித்யா சிந்தியாவை களமிறக்கியது!
போபால்: மத்தியப் பிரதேசத்தில் பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற பாஜக ஸ்டைலில் களம் இறங்கியுள்ளது காங்கிரஸ்.
இந்த பார்முலாவுக்காக அது தொடர்ந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு ஜால்ரா அடித்தும், ஐஸ் வைத்தபடியும் இருக்கும் திக்விஜய் சிங்கைக் கூட ஓரம் கட்டி வைத்துள்ளது.
அவருக்குப் பதில் இளைஞரான ஜோதிராதித்யா சிந்தியாவை முன்னிறுத்தியுள்ளது. இது கிட்டத்தட்ட மோடியை எப்படி பாஜக பிரசாரக் குழுத் தலைராக அக்கட்சி அறிவித்ததோ அதே ஸ்டைல்தான்.

இன்னும் 3 மாதமே
மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தல் வர இன்னும் 3 மாதங்களே உள்ளது. இந்தத் தேர்தலை சிந்தியா தலைமையில் காங்கிரஸ் சந்திக்கும் என்று மேலிடம் அறிவித்துள்ளது.

ராஜ குடும்பத்து சிந்தியா
சி்ந்தியா தற்போது மத்திய அமைச்சராக உள்ளார். ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். மறைந்த காங்கிரஸ் தலைவர் மாதவராவ் சிந்தியாவின் மகன். பாஜக முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் மருமகனும் ஆவார்.

ஓரம் கட்டப்பட்ட திக்விஜய் சிங்
மத்தியப் பிரதேசத்தில் 10 வருடம் முதல்வராக இருந்த அனுபவம் படைத்தவர் திக்விஜய் சிங். ஆனால் பாஜகவை வீழ்த்த மோடி மந்திரத்தைக் கையில் எடுத்துள்ள காரணத்தால் சிங்க ஓரம் கட்டி விட்டு சிந்தியாவை முன்னிறுத்தியுள்ளது காங்கிரஸ்.

குழுவில் இடமில்லை
சிந்தியா தலைமையிலான 22 பேர் கொண்ட பிரசாரக் குழுவில் கூட சிங்குக்கு இடம் இல்லை. இது சிங்கையும், அவரது ஆதரவாளர்களையும் மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

கோஷ்டிப் பூசலை சமாளிக்கவே
சிங்கை காங்கிரஸ் ஓரம் கட்டி வைத்திருப்பதற்குக் காரணம் அங்கு நிலவும் கோஷ்டிப் பூசலைச் சமாளிக்கத்தானாம். பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை நினைக்கிறதாம். இதனால்தான் சிந்தியாவை கொண்டு வந்துள்ளதாம்.

மோடி ஸ்டைல்
இதன் மூலம் மோடி ஸ்டைலை அது காட்டியுள்ளது. அதாவது எப்படி பாஜக பிரசாரக் குழுவுக்கு மோடியைத் தலைவராக்கி அவர்தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்பது போல பாஜக மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளதோ அதே போல, சிந்தியாவை பிரசாரக் குழுத் தலைவராக்கி அவர்தான் அடுத்த ம.பி. முதல்வர் வேட்பாளர் என்று காங்கிரஸ் கூறுகிறதாம்.

அப்ப கமல்நாத் கதி...
ஆனால் ம.பியைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களான திக்விஜய் சிங், கமல்நாத், சுரேஷ் பச்சோரி, காந்திலால் பூரியா போன்றோர் கட்சியின் இந்த முடிவில் அதிருப்தியுடன் உள்ளனராம்.

ஆனால் சிந்தியாவால் முடியுமா...
இருப்பினும் சிந்தியாவால் மத்தியப் பிரதேச ஜாதி அரசியலில் நீந்திக் கரை சேர முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
பார்க்கலாம்.. சிந்தியா மாயம் பலிக்கிறதா என்பதை.












Click it and Unblock the Notifications