ஈழத் தமிழர்க்காக ஜெனிவாவில் தீக்குளித்து மரணமடைந்த இளைஞருக்கு வைகோ இரங்கல்
சென்னை: ஈழத்தமிழர்களின் நலன்காக்க ஜெனிவாவில் தீக்குளித்து உயிரிழந்த இளைஞர் செந்தில்குமாரனுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:
அனைத்துலக நாடுகளின் மனச்சாட்சியின் கதவைத் தட்டுவதற்காக, ஈழத் தமிழ் இளைஞன் செந்தில்குமரன், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் உடலில் பெட்ரோலை ஊற்றி, நெருப்பு வைத்துக் கொண்டு, தமிழ் ஈழத்துக்கான நீதி கேட்டு உயிர்த் தியாகம் செய்துள்ளார்.

தமிழினத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் திருவுருவப் படத்தை ஏந்தியவாறு சென்று முழக்கமிட்டு பின்னர் மரண நெருப்புக்குத் தன் உயிரைத் தந்துள்ளார்.
இதே ஜெனீவாவில்தான் 2009- தொடக்கத்தில் முருகதாஸ் என்னும் ஈழத் தமிழ் இளைஞரும் ஈழத் தமிழினப் படுகொலையைத் தடுக்க ஐ.நா. மன்றத்தையும் மனித உரிமை ஆணையத்தையும் ஈழத் தமிழருக்கு நீதி வழங்குங்கள் என்று தனது நெஞ்சில் வடிந்த இரத்தக் கண்ணீரை உருக்கமான வேண்டுகோளாக ஒரு மரண சாசனத்தை எழுதி வைத்துவிட்டு தீக்குளித்து மாண்டார். இன்று வரையிலும் ஈழத் தமிழருக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. உலகத்தின் மனச்சாட்சியும் விழிக்கவில்லை.
தன் உயிரை அழித்துக் கொள்வதன் மூலமாகவாவது உலகத்தின் கவனம் நீதியின் பக்கம் திரும்பாதா? கொடியவன் இராஜபக்சேவின் கொட்டம் ஒடுங்காதா? என்று தன்னைத் தானே செந்தில்குமரன் அழித்துக் கொண்டான். உலகிலேயே நாதியற்றுப் போன இனம் தமிழினம் தானா? இன்னும் எத்தனை தமிழ் உயிர்கள் தான் பலியாவதோ? என்று தமிழகத்திலும், தரணியெங்கும் உள்ள தமிழர்கள், குறிப்பாக இளந்தலைமுறையினர் சிந்திக்க வேண்டுகிறேன்.
தமிழீழத்தில் பிறந்து எங்கோ ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ஜெனீவாவிலே தன் உயிரைப் பலியிட்டுக் கொண்ட செந்தில்குமரனுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். என் கண்ணீரைக் காணிக்கையாக்குகிறேன்.












Click it and Unblock the Notifications