செப்டம்பர் 15 முதல் அம்மா மினரல் வாட்டர் அறிமுகம்
சென்னை: அம்மா மினரல் குடிநீர் திட்டத்தை செப்டம்பர் 15 ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கின்றார்.
அண்ணா பிறந்த நாள் முதல் இந்த குடிநீர் விற்பனைக்கு வருவதாக தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இதையடுத்து செப்டம்பர் 15ம் தேதி இந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

சுத்தமான குடிநீருக்குப் பற்றாக்குறை
பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளில் முக்கியமானது குடிநீர். தமிழகத்தில் பல இடங்களில் சுத்தமாக குடிநீரை அரசு வழங்குவது இல்லை.

மினரல் வாட்டர்
இதனால், மேல்தட்டு மக்கள் சுகாதாரத்தை காக்கும் விதமாக மினரல் வாட்டர் வாங்கும் பழக்கத்தை மேற்கொண்டனர்.

அனைவரும் அருந்தும் மினரல் வாட்டர்
இந்த பழக்கம் தற்போது, நடுத்தர மக்களிடமும் தொற்றிக் கொண்டு, அதிகரித்து வருகின்றது.

பயணங்களில் கை கொடுப்பது மினரல் வாட்டரே
பேருந்து, ரயில் பயணிகளில் பயணம் செய்யும் பொது மக்கள் தான் அதிக அளவு மினரல் வாட்டரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

விலை ஜாஸ்திதான்
இதனால், பெரும்பாலான கடைகளில் 1 லிட்டர் மினரல் வாட்டர் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், ரயில் பயணிகளின் நலன் கருதி, 1 லிட்டர் மினரல் வாட்டர் (ரெயில் நீர்) ரூ.15 க்கு ரயில்வே சார்பில் விற்பனை செய்யப்படுகிறது.

அரசு பஸ்களில் அம்மா மினரல் வாட்டர்
இதனையடுத்து, இந்த திட்டத்தை பின்பற்றி, அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 'அம்மா மினரல் வாட்டர்' உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.

கும்மிடிப்பூண்டியில் குடிநீர் தயாரிப்பு
இதை செயல்படுத்தும் விதமாக, முதல் கட்டமாக, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தினமும் 3 லட்சம் லிட்டர் மினரல் வாட்டர் குடிநீர் தயாரிக்கும் வகையில் 'அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது.

ஒரு லிட்டர் ரூ. 10க்கு
இங்கு உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு 1 லிட்டர் பாட்டில் குடிநீர் 10 ரூபாய்க்கு விற்கப்படும்.

அனைத்து அரசு பஸ்களிலும்
இவை அரசு பஸ்களிலும், சென்னையில் உள்ள பஸ் நிலையங்களிலும், மாவட்டங்களில் உள்ள புறநகர் பஸ் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும்.
பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான வரும் 15 ம் தேதி துவங்கப்பட்டு அன்றைய தினமே மினரல் வாட்டர் விற்பனை நடை முறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications