உ.பி. வன்முறையில் 31 பேர் பலி! முதல்வர் அகிலேஷுடன் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை!!
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் வெடித்த வன்முறையில் 31 பேர் பலியாகி பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அம் மாநில நிலவரம் குறித்து முதல்வர் அகிலேஷ் யாதவுடன் பிரதமர் மன்மோகன்சிங் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
வன்முறைக்கு காரணமனா 3 கொலைகள்
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் கவால் கிராமத்தில் ஒரு பிரிவை சேர்ந்த பெண்ணை கடந்த மாதம் 27-ந்தேதி மற்றொரு பிரிவை சேர்ந்த ஷானவாஸ் என்பவர் கேலி கிண்டல் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்களான சச்சின் மற்றும் கவுரவ் ஆகியோர் சேர்ந்து ஷானவாசை அடித்து கொலை செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஷானவாசின் உறவினர்கள் சச்சின் மற்றும் கவுரவை சுட்டுக் கொன்றனர். இந்த 3 கொலை தொடர்பாக இரு பிரிவிலும் 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கலவரம் மூண்டது-31 பேர் பலி
இந்த வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 7-ந்தேதி நக்லா மண்டர் பகுதியில் ஒரு பிரிவினர் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டம் முடிந்ததும் அங்கு இரு பிரிவினருக்கும் இடையே கலவரம் மூண்டது. இதில் இருதரப்பும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். இந்த கலவரம் முசாபர்நகர் மாவட்டம் முழுவதும் பரவியது. அத்துடன் அருகில் உள்ள பாக்பட் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவியதால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் வரவழைக்கப்பட்டது. இந்த வன்முறையில் மொத்தம் 31 பேர் பலியாகினர். மேலும் 45-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்த கலவரத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பள்ளி-கல்லூரிகளுக்கு வருகிற 12-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இக் கலவரம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.மேலும் மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் குகும் சிங், சங்கீத் சிங் சோம், சுரேஷ் ரானா, கன்வர் பாரதேண்டு, பாரதிய கிசான் யூனியன் அமைப்பு தலைவர் ராகேஷ் தியாகத் மற்றும் நரேஷ் தியாகத் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் எம்.பி. கரேந்திரா மாலிக் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இயல்புநிலை திரும்பும்வரை முசாபர்நகர் கலவர நிலவரம் பற்றி 12 மணி நேரத்துக்கு ஒருமுறை அறிக்கை அனுப்புமாறு உத்தரபிரதேச அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் முதல்வர் அகிலேஷ் யாதவுடன் பிரதமர் மன்மோகன்சிங் தொலைபேசியில் பேசினார். அப்போது, கலவரத்துக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். அப்பாவி மக்கள் பலியானதற்கு அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்தார். அமைதியை நிலை நாட்ட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார். நிலைமையை சமாளிக்க தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என்றும் பிரதமர் உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications