நாளை நீட் தேர்வு.. இன்று தூக்கில் தொங்கிய மாணவி - அரியலூர் தலித் மாணவியின் சோக முடிவு
அரியலூர்: நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தோல்வி பயம் காரணமாக மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
மருத்துவப் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக நீட் என்ற நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்தது.
இதற்கு தொடக்கத்திலிருந்தே தமிழக அரசியல் கட்சிகளும் மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இதனால் அனிதா தொடங்கி பல மாணவர்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.
நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி 15 மாணவர்கள் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்
நீட் தேர்வு விலக்கு மசோதா
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குகோரி சட்டப்பேரவையில் 2 முறை தீர்மானங்களை நிறைவேற்றியும் ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியதால் இந்த ஆண்டும் தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தனர்.
நாளை நீட் தேர்வு
இந்த நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு நாளை (ஜூலை 17 ஆம் தேதி) நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. நீட் தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கு மே 6 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு தேர்வு நேரம் 3 மணி நேரம் 20 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்வு தமிழ்நாடு மாணவர்களை மட்டுமின்றி மற்ற மாநில மாணவர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.
அரியலூர் மாணவி
அரியலூர் மாவட்டம் ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் நிஷாந்தினி. தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்ற இந்த மாணவி 430 மதிப்பெண்களை பெற்று மருத்துவம் படிக்க விரும்பி நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார். தலித் சமுதாயத்தை சேர்ந்த இந்த மாணவி கடந்த முறை நீட் தேர்வில் 220 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.
மாணவி தற்கொலை
நாளை நடைபெற இருக்கும் நீட் தேர்வுக்காக தயாராகி வந்த நிஷாந்தினி தோல்வி பயம் காரணமாக இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர் மாணவன்
இதேபோல் கடந்த 7 ஆம் தேதி ஓசூர் அரசனட்டி பகுதியை சேர்ந்த கோபி என்பவரது 18 வயது மகன் முரளி கிருஷ்ணா இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்த அவர், இம்முறையும் தோல்வியடைவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்டார். தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை என்னும் துயர முடிவை தேடிச் செல்வது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.