"இலங்கையை பாருங்க.. அந்த நிலைதான் தமிழகத்திற்கும்!" பிரேமலதா விஜயகாந்த் பரபர.. காரணம் என்ன தெரியுமா
அரியலூர்: கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கருத்து தெரிவித்தார்.
Recommended Video
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அரியலூர் மாவட்டத்திற்கு வந்துள்ளார்.
இதனிடையே அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் திமுக அரசைத் தாக்கும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்தார்.

பிரேமலதா விஜயகாந்த்
அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், "தமிழக அரசு ஓராண்டில் நூற்றாண்டு சாதனை என்று கூறிவருகிறது. ஆனால் மக்கள் போற்றும் சாதனை என்று எதுவும் பார்க்கமுடியவில்லை. தமிழகத்தில் மின்வெட்டு தொடர்கிறது. ஆந்திரா மாநில முன்னால் முதல்வர் சந்திரபாபு நாயுடு ரேசன்அரிசி கடத்தலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதுகிறார். இதன்மூலம் தமிழகத்தின் நிலை என்ன என்று தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ரேசன் கடத்தல் என்பதை ஆளுங்கட்சியினரே செய்கின்றனர்.

சட்ட ஒழுங்கு
தமிழக அரசு மக்களின் அடிப்படை கோரிக்கைகளான தூர்வாருதல், சாலைவசதி, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில் தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளன. இப்படிப்பட்ட நிலையில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால் பட்டப்பகலிலேயே வெளியே செல்லமுடியவில்லை. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதா என்பதைப் பொதுமக்கள் முடிவெடுக்கட்டும். குற்றவாளிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்.

யாருடன் கூட்டணி
தேமுதிகவை பொறுத்தவரையில் தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை. தமிழகம் முழுவதும் எங்கள் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றோம். கட்சி தேர்தல், பொறுப்பாளர்களுடன் ஆலோசனை உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர உள்ளோம். மத்திய, மாநில அரசுகள் செய்யவேண்டிய நலத்திட்டங்கள் அதிகம் உள்ளன. மாவட்டந்தோறும் தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவேண்டும்.

சசிகலா விவகாரம்
லஞ்சம் ஊழல் ஒழியவில்லை. மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு அரசியல் மட்டுமே செய்கின்றனர். மக்களுக்குத் திட்டங்கள் சேருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யவேண்டும். சசிகலாவின் அறிவிப்பு என்பது அவர்களின் உள்கட்சி விவகாரம். அவர் ஆன்மீக பயணமும், அவ்வப்போது அறிவிப்புகளும் செய்துவருகின்றார். முழு அளவில் அவர் அரசியலுக்கு வந்தபிறகு பொறுத்திருந்து பார்ப்போம்.

கச்சத்தீவு
இலங்கையின் நிலையில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தவேண்டும். இது கச்சத்தீவை மீட்கச் சரியான தருணம். இதுபோன்ற செயல்களைச் செய்தால் பாராட்டுவோம். பெட்ரோல் விலை உயர்வில் அண்டை மாநிலங்கள் குறைத்து வருகின்றன. நமது மாநில அமைச்சரும் மத்திய அரசுபோல் குறைத்து மக்களின் சிரமத்தை உணர்ந்து பார்க்கவேண்டும். பெட்ரோல் விலை உயர்வால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் வளர்ச்சி குறித்து உணர்ந்து பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும்.

தமிழக அரசுக்குப் பாடம்
இலங்கையில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. அங்கு ஆட்சி மாற்றமும் நடந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியில் கவனம் இல்லாமை, இலவசத் திட்டங்களை அதிகமாக வழங்கியதுதான் இலங்கையில் இந்த நிலை ஏற்பட முக்கிய காரணம். இதனைத் தமிழக அரசு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் தமிழகத்தில்தான் 37சதவீதம் இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்படுவதாக சர்வே தெரிவிக்கின்றது.

இலங்கை நிலை தான் நமக்கும்
ஓட்டுக்காகவும், ஆட்சியைப் பிடிப்பதற்காகவும் வழங்கப்படும் இலவசங்கள் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றது. பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் இலவசம், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய், ரேசனில் இலவச பொருள்கள் என்று பலதிட்டங்களை அறிவித்தனர். இதே நிலையைத் தொடர்ந்தால் இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து முதலமைச்சரிடம் கேட்கக்கூடாது என்றும் டி.ஆர்.பாலுவிடம் மட்டுமே கேட்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறுவது, மக்களை முட்டாளுக்கும் பேச்சு.

தேர்தல் வாக்குறுதிகள்
மக்கள் தேர்தல் வாக்குறுதியை நம்பி வாக்களித்துள்ள நிலையில், ஆட்சி எந்தளவுக்கு இருக்கிறது என்பது ஒருபானைக்கு ஒருசோறு என்பது போல் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. நீட் விலக்கு சாத்தியமா என்பதை முதலில் தமிழக அரசு உணரவேண்டும். பொய்யான வாக்குறுதிகளை அளித்து மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றக்கூடாது" என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications