“ஆரம்பிக்கும்போதே திருட்டா?.. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை”.. மல்லை சத்யாவை கிண்டல் செய்த துரை வைகோ
அரியலூர்: மல்லை சத்யாவின் புதிய கட்சியின் பெயரைச் சொல்லக் கூட எனக்கு விருப்பமில்லை என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ காட்டமாக தெரிவித்துள்ளார். "ஆரம்பிக்கும்போதே திருட்டுப் பழக்கத்துல ஆரம்பிச்சா கடைசி வரைக்கும் திருட்டுப் பழக்கம் தான் இருக்கும். கட்சி பெயரைக் கூட இன்னொரு கட்சி பெயரை களவாடி வைத்துள்ளார்கள்." என துரை வைகோ விமர்சித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் கள்ளூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த துரை வைகோ அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஒரு இயக்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவது மக்கள் சக்தி. மக்கள் வாக்களித்து தான் ஓர் இயக்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால், பஞ்சாங்கத்தை பார்த்து இந்தக் கட்சி ஆட்சிக்கு வரும், அந்தக் கட்சி ஆட்சியை இழக்கும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது நகைப்புக்குரியது. அவர் ஒரு நல்ல அரசியல்வாதி. சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துள்ளார்.

எல்லா இயக்கத்துக்கும் தனிப்பட்ட சின்னம் உண்டு. அதில் போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் கருத்து. வரும் சட்டசபைத் தேர்தலில் எங்களுக்கான அங்கீகாரம் வேண்டும் என எங்கள் கூட்டணி தலைமையிடம் கூறியுள்ளோம். அவர்கள் எங்களுக்கான அங்கீகாரத்தை கொடுப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
மதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற மல்லை சத்யா தொடங்கியுள்ள 'திராவிட வெற்றிக் கழகம்' கட்சியின் பெயர் ஏற்கெனவே வேறு ஒருவர் பதிவு செய்த பெயர் என கூறப்படுவது குறித்த கேள்விக்கு, "தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை. ஆரம்பிக்கும்போதே திருட்டுப் பழக்கத்துல ஆரம்பிச்சா கடைசி வரைக்கும் திருட்டுப் பழக்கம் தான் இருக்கும். கட்சி பெயரைக் கூட இன்னொரு கட்சி பெயரை களவாடி வைத்துள்ளார்கள். அந்த பெயரைக் கூட எனக்குச் சொல்லப் பிடிக்காது" எனக் காட்டமாகக் கூறினார் துரை வைகோ.
மேலும் பேசிய துரை வைகோ, "நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் 18 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. 22 சதவீதமாக ஈரப்பதத்தை கூட்டினால் தான் விவசாயிகள் நெல்லை விற்க முடியும். ஆனால் இந்த கோரிக்கை ஒவ்வொரு ஆண்டும் எழுந்து வருகிறது.
மத்திய குழுவினர் வருவார்கள், சுற்றுப்பயணம் செய்வார்கள். செய்தியாளர்களை சந்திப்பார்கள். கடைசியில் முடியாது என்பார்கள். இதனால் பாதிக்கப்படுவது விவசாயிகள். எனவே இந்தக் கோரிக்கையை தமிழக அரசின் கோரிக்கையாகவோ, திமுகவின் கோரிக்கையாகவோ, நினைக்காமல் தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கையாக மத்திய அரசு பார்க்க வேண்டும். இதில், அரசியல் பார்க்கக் கூடாது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலமே பீகாரில் வெற்றி பெற்றதாக அதிமுக தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தகுதியான வாக்காளர்களை நீக்கிவிட்டு தகுதி இல்லாத வாக்காளர்களை சேர்த்து பாஜகவும், அதிமுகவும் வெற்றி பெற துடித்து வருகின்றன. இந்த பணிகளுக்கு குறைந்தது ஒன்று முதல் மூன்று வருட காலம் எடுத்துக் கொள்ளும். ஆனால், அதனை உடனே முடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications