அடித்துச் சொன்ன எடியூரப்பா.. 99% ஜெகதீஷ் ஷெட்டருக்கு பாஜகவில் சீட் உறுதியாம்.. டிக்கெட்டா? டாட்டாவா?
பெங்களுர் : கர்நாடக பாஜகவில் மூத்த தலைவர்கள் பலருக்கு சீட் கொடுக்காமல் கட்சித் தலைமை டாட்டா காட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 99 சதவீதம் ஜெகதீஷ் ஷெட்டருக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும் என கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். பாஜகவின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் இன்று இரவுக்குள் வெளியிடப்படும் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 189 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமை நேற்று இரவு வெளியிட்டது. பல சிட்டிங் எம்.எல்.ஏ.க்களின் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. பாஜக மூத்த தலைவர்கள் பலருக்கும் பாஜக வாய்ப்பு மறுத்துள்ளது.
பாஜக கட்சி விதிப்படி 75 வயதை கடந்தவர்கள் தேர்தல் அரசியலில் இருந்து விலக வேண்டும் என்ற நிலை உள்ளது. இதனை காரணம் காட்டி கர்நாடக பாஜகவின் முகமாக அறியப்பட்ட எடியூரப்பா கடந்த 2021ஆம் ஆண்டு தனது 79ஆவது வயதில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். அவருக்கு பிறகு பசவராஜ் பொம்மை கர்நாடக முதல்வரானார்.

பாஜக சீட் : எதிர்வரும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில், பாஜக மூத்த தலைவரான எடியூரப்பாவுக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில், அவரது மகன் விஜயேந்திராவுக்கு மட்டும் அவரது தந்தையின் தொகுதியான ஷிகாபுராவில் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பு வழங்கி உள்ளது.
வயது காரணமாகவும், பல்வேறு காரணங்களாலும் மூத்த தலைவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெறாததால் பாஜக மூத்த தலைவர்கள், சீனியர் எம்.எல்.ஏக்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். தனக்கு சீட் வழங்காததோடு, தனது மகனுக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்காத காரணத்தால் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார்.
சீனியர்கள் அப்செட் : கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான லட்சுமண் சவதி, நேற்று வெளியிடப்பட்ட பாஜக வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததால் கடுமையாக அதிருப்தி அடைந்து கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதாதால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக 58 வயதான பாஜக அமைச்சர் எஸ்.அங்காரா தெரிவித்துள்ளார்.
கர்நாடகா முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனக்கு சீட் கொடுக்க தலைமை மறுத்து வருவதால் அதிருப்தி அடைந்துள்ளார். பாஜகவின் வளர்ச்சிக்கு தான் பெரிதும் உதவியாக இருந்ததாகவும் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என தலைமையிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜெகதீஷ் ஷெட்டர் : முன்னாள் முதலமைச்சரும், ஆறு முறை எம்.எல்.ஏவாக இருந்தவருமான ஜெகதீஷ் ஷெட்டர் கர்நாடகவில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தவர். அவருக்கே கட்சியில் போட்டியிட வாய்ப்பு தர மறுத்த விவகாரம் அம்மாநில பாஜகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று இரவுக்குள் இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார். கட்சி மேலிடம் தீவிர ஆலோசனைக்குப் பின்னரே 189 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியல் எனக்கு திருப்தி அளிக்கிறது என எடியூரப்பா தெரிவித்தார்.
மேலும், ஜெகதீஷ் ஷெட்டருக்கு 99% சீட் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும், நேற்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பாஜக 125 முதல் 130 தொகுதிகளில் வெற்றி பெறும், மீண்டும் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications