கர்நாடகா: திருவள்ளுவர் சிலை அவமரியாதை- சுத்தம் செய்வதாக விபூதி, குங்குமம்- தமிழ்ச் சங்கம் கண்டனம்
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூர் அல்சூரில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு "முகமூடி" அணிவித்து சிலர் அவமரியாதை செய்ததால் தமிழர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மூகமூடியை அகற்றி சிலையை சுத்தம் செய்வதாக கூறிய சிலர் திருவள்ளுவருக்கு விபூதி,குங்குமம் வைத்ததும் சர்ச்சையாகி இருக்கிறது. இத்தகைய செயல்களுக்கு பெங்களூர் தமிழ்ச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பெங்களூர் அல்சூர் திருவள்ளுவர் சிலை, தமிழர்களின் அடையாளமாக இருந்து வருகிறது. இந்த திருவள்ளுவர் சிலையை திறக்க கன்னடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பல ஆண்டுகளாக திருவள்ளுவர் சிலை மூடியே வைக்கப்பட்டிருந்தது. 2009-ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக இருந்த கருணாநிதி இந்த சிலையைத் திறந்து வைத்தார்.

தற்போது பெங்களூர் அல்சூர் திருவள்ளுவர் சிலைக்கு மர்ம நபர்கள் திடீரென "முகமூடி" அணிவித்து அவமரியாதை செய்தனர். இது தொடர்பாக பெங்களூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து அல்சூர் போலீசார், திருவள்ளுவர் முகத்தில் அணிவிக்கப்பட்டிருந்த மாஸ்க்கை அகற்றினர்.
மேலும் திருவள்ளுவர் சிலையை எம்.எல்.ஏ. ரிஸ்வான் அர்ஷத் பார்வையிட்டார். அப்போது, திருவள்ளுவரை யாராலும் அவமரியாதை செய்ய முடியாது. திருவள்ளுவர் சிலைக்கு "முகமூடி" அணிவித்த நபர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக போலீசாருக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது என்றார்.
மேலும் திருவள்ளுவர் பூங்காவை சுற்றுலா மையமாக மாற்றி திருக்குறளை தமிழ், கன்னட மொழியில் ஒலிபரப்பு செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. விரைவில் பெங்களூர் நகரின் அடையாளங்களில் ஒன்றாக திருவள்ளுவர் பூங்கா உருவாகும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதத்தில் திருவள்ளுவர் பூங்கா அமையும் என்றார்.
இதனிடையே பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் கோ. தாமோதரன் வெளியிட்ட அறிக்கையில், 1991-ம் ஆண்டு திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. 18 ஆண்டுகளாக இந்த சிலை மூடி வைக்கப்பட்டது. பல்வேறு போராட்டங்கள், வழக்குகளுக்குப் பின் 2009-ல் இந்த சிலை திறக்கப்பட்டது.
பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தால் நிறுவப்பட்ட ஐயன் வள்ளுவர் சிலையின் முகத்தை முகமூடி அணிவித்து மறைத்தும் பின்னர் வேறு ஒரு அணியினர் அதை சுத்தம் செய்கிறோம் என்று தண்ணீரால் கழுவி, பால் அபிஷேகம் செய்தும் வள்ளுவர் சிலைக்கு விபூதி பட்டை அடித்தும் குங்குமம் வைத்து இருக்கிறார்கள். இத்தகைய இரண்டு செயல்களை பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழர்கள் இவர்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும் என கண்டனமும் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications