‛‛மோடிக்கு ஓட்டுப்போடாதீங்க’’.. வாரணாசியில் ஷ்யாம் ரங்கீலாவுக்கு நடிகர் கிஷோர் ஆதரவு! பாஜக டென்ஷன்
பெங்களூர்: வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடுவதாக அறிவித்துள்ள மிமிக்ரி கலைஞரும், நடிகருமான ஷ்யாம் ரங்கீலாவுக்கு ஆதரவாக நடிகர் கிஷோர் வீடியோ வெளியிட்டு ஓட்டு கேட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக காமெடி செய்கிறார். அவருக்கு பதில் ஷ்யாம் ரங்கீலாவுக்கு ஓட்டுப்போடுங்கள் என நடிகர் கிஷோர் கூறியிருப்பதால் பாஜகவினர் டென்ஷனாகி உள்ளனர்.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்ட தேர்தல்கள் கடந்த மாதம் 19, 26 ஆகிய தேதிகளில் முடிவடைந்துவிட்டது. 3வது கட்ட தேர்தல் வரும் 7 ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2014, 2019 தேர்தலில் வாரணாசியில் வென்ற பிரதமர் மோடி 3வது முறையாக களமிறங்கி உள்ளார்.
வாரணாசி தொகுதிக்கு கடைசியாக ஜுன் 1ம் தேதி அதாவது 7 வது கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார். இவர் உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். கடந்த 2014, 2019 தேர்தல்களில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட போவதாக பிரபல நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான 28 வயது நிரம்பிய ஷ்யாம் ரங்கீலா அறிவித்துள்ளார். அரசியல் தலைவர்களை போல் மிமிக்ரி, நையாண்டி செய்து பலரது கவனத்தை பெற்ற இவருக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த ஷ்யாம் ரங்கீலா அதன்பிறகு பாஜகவை கலாய்க்க தொடங்கினார். அதன்பிறகு அவரது நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இப்போது பிரதமர் மோடிக்கு எதிராக களமிறங்குவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:
‛‛சூரத் மற்றும் இந்தூர் போல் எதிர்த்து போட்டியிட வேட்பாளர்கள் இல்லாமல் பிரதமர் மோடி வெற்றிபெற்றுவிடக் கூடாது. இதனை அவரை எதிர்த்து சுயேச்சையாக களமிறங்க உள்ளேன். 2014ல் பிரதமர் மோடியின் சீடனாக இருந்தேன். அப்போது, பிரதமருக்கு ஆதரவாகவும், ராகுல், கெஜ்ரிவாலுக்கு எதிராகவும் மிமிக்ரி வீடியோக்களையும் பதிவிட்டு வந்தேன். ஆனால் 10 ஆண்டுகளில் நிலைமை தலைக்கீழாக மாறிவிட்டது. இதனால் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட உள்ளேன்'' என்றார்.
இந்நிலையில் தான் வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடும் ஷ்யாம் ரங்கீலாவுக்கு, நடிகர் கிஷோர் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ் உள்பட பல மொழிப்படங்களில் நடிகர் கிஷோர் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழை பொறுத்தமட்டில் வெண்ணிலா கபடி குழு, ஆடுகளம், சார்பட்ட பரம்பரரை, பொன்னியின் செல்வன் I, II, ஜெயிலர் உள்பட பல படங்களில் நடிகர் கிஷோர் நடித்துள்ளார். இந்நிலையில் தான் கிஷோர், பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கி உள்ள நடிகர் சியாம் ரங்கேலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் கிஷோர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது: தயவு செய்து சியாம் ரங்கீலாவுக்கு ஓட்டுப்போடுங்கள். அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். தேர்தலில் போட்டியிடும் உங்களின் (சியாம் ரங்கீலா) முடிவை நான் வரவேற்று பெருமைப்படுகிறேன். வாரணாசி மக்களுக்கு உண்மையாககவே சேவை செய்வீர்கள் என்று நம்புகிறேன். அதிர்ஷ்டம் உங்களின் பக்கம் இருக்கட்டும்.
எம்பியாக மக்கள் சேவையில் நீங்கள் ஈடுபட்டால் உங்களின் நகைச்சுவையை நாங்கள் தவற விடலாம். ஆனால் நீங்கள் விட்ட இடத்தை மோடி நிரப்பி விடுவார். சொல்லப்பபோனால் உங்களை விட சிறந்த நகைச்சுவை நடிகராக எங்களை மகிழ்விப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து மக்களும் அதற்கான செயல்பாடுகளை பார்த்து வருகின்றனர்.'' என தெரிவித்துள்ளார். இதனால் நடிகர் கிஷோர் மீது பாஜகவினர் டென்ஷனாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications