பிரச்சாரக் கூட்டத்தில் தப்பாக தொட்டவருக்கு… பளார்… பளார் விட்ட குஷ்பு
Recommended Video
பெங்களூரு: பிரச்சார கூட்ட நெரிசலை பயன்படுத்தி தவறாக தொட்ட நபரை, கன்னத்தில் பளார், பளார் என நடிகை குஷ்பு அடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை ஆதரித்து, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நட்சத்திர பேச்சாளருமான நடிகை குஷ்பு, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
கர்நாடகத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தேசிய தலைவர்கள், திரைப் பிரபலங்களின் பிரச்சாரம் என கர்நாடகா மாநிலத்தில் தேர்தல்களம் களைகட்டி உள்ளது.
|
கூட்ட நெரிசல்
இந்த நிலையில்,மத்திய பெங்களூரு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் ஹர்ஷத்தை ஆதரித்து நடிகை குஷ்பு, திறந்த வாகனத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, அவரை காணவும், அவரது பேச்சைக் கேட்கவும் ஏராளமானோர் கூடினர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
தீய சக்தி
அப்போது பேசிய குஷ்பு, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா என பார்க்காமல் தீய சக்தி, நல்ல சக்தி என்று தேர்தலை பார்க்க வேண்டும். பா.ஜனதா என்றாலே தீய சக்தி தான். மோடி தமிழ்நாடு என்றாலே வெறுக்கிறார். பாஜக ஆட்சியில் விலைவாசிகள் உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.
குஷ்பு கோபம்
பிரச்சாரத்தில் பேசிவிட்டு, காரை நோக்கிச் சென்ற நடிகை குஷ்புவை பின்தொடர்ந்து ஏராளமானோர் ஓடிவந்தனர். அப்போது ஒருவர், குஷ்புவை தவறான முறையில் தட்டினார். உடனே கொந்தளிப்புடன் பின்னால் திரும்பிய குஷ்பு, அந்த நபரின் கன்னத்தில் பளார், பளார் என அறைந்தார்.
காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சி
இதனை கண்டு அருகில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆரவார சத்தம் எழுப்பி கொண்டிருந்த தொண்டர்கள், இந்த சம்பவத்தை கண்டு கப்சிப் ஆகினர். குஷ்புவிடம் அடிவாங்கிய நபரை, போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். நடிகை குஷ்பு அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.