ஹரியானா அடி: மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கர்நாடகா 'தலை'களுக்கும் வாய்ப்பூட்டு போட்ட காங்கிரஸ் மேலிடம்!
பெங்களூர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சி தற்போது ஒவ்வொரு மாநிலமாக உட்கட்சி மோதல்கள் குறித்து கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் உட்கட்சி மோதலை நிறுத்த மேலிடப் பார்வையாளர் ரமேஷ் சென்னிதாலாவை டெல்லி காங்கிரஸ் மேலிடம் அனுப்பியது. அதேபோல கர்நாடகாவில் முதல்வர் பதவி தொடர்பான அமைச்சர்கள் ஆளுக்கு ஒரு கருத்து தெரிவிக்கவும் காங்கிரஸ் மேலிடம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களைத் தொடர்ந்து ஹரியானாவிலும் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. இதற்கு காரணமே இந்த மாநிலங்களில் ஆளுக்கு ஒரு தலைவர்கள் கோஷ்டி சேர்த்துக் கொண்டு செயல்பட்டு வருவதுதான் என்பது வெளிப்படை. ஆனாலும் டெல்லி காங்கிரஸ் மேலிடம் இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதேனும் ஒரு தலைவரை மட்டுமே நம்பிக் கொண்டு இருந்ததால் மிகவும் எதிர்பார்த்த ஹரியானாவிலும் மரண அடியை வாங்கிவிட்டது.

இதே நிலைமைதான் மகாராஷ்டிராவிலும் இருக்கிறது. இதனால் உடனே உஷாரான காங்கிரஸ் மேலிடம், பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலாவை மும்பைக்கு அனுப்பி வைத்தது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவரும் கருத்து தெரிவிக்க ரமேஷ் சென்னிதாலா மூலம் மேலிடம் அதிரடியாக தடை விதித்தது.
தற்போது இதே பாணியில்தான் கர்நாடகாவிலும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது டெல்லி மேலிடம். முடா முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையா பதவிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. முடா வழக்கில் அமலாக்கத்துறையும் இறங்கிவிட்டதால் சித்தராமையா எப்போது வேண்டுமானாலும் பதவியை பறிகொடுக்க நேரிடும் என்பதுதான் நிலைமை.
இதனை பயன்படுத்திக் கொண்டு துணை முதல்வர் டிகே சிவகுமார் ஒரு பக்கம் முதல்வர் பதவியை கைப்பற்ற பகீரத முயற்சிகளை மேற்கொள்கிறார்; அதேநேரத்தில் சித்தராமையாவின் ஆதரவு அமைச்சர்களோ ஒவ்வொருவரும் தாமே அடுத்த முதல்வர் என பேசி வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும் அமைச்சர்கள் நடத்தி வருகின்றனர். இதனால் கடுப்பாகிப் போனதாம் டெல்லி மேலிடம். இதனையடுத்து பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் மூலம் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமாருக்கு கறார் உத்தரவை பிறப்பித்துள்ளதாம் டெல்லி மேலிடம். கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர்கள் வாயை திறக்காமல் அமைதி காக்க வேண்டும்; அவர்களை சித்தராமையாவும் சிவகுமாரும்தான் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவாம். இதனையடுத்தே நேற்று சித்தராமையாவை திடீரென அவரது வீட்டுக்குப் போய் சந்தித்து ஆலோசனை நடத்தினாராம் டிகே சிவகுமார்.












Click it and Unblock the Notifications