பெங்களூரில் ஆட்டம் கண்ட.. Air India விமானம்! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்!
பெங்களூர்: லண்டனின் ஹீத்ரோவிலிருந்து பெங்களூர் நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், அடுத்த பயணத்திற்கு கிளம்ப முயன்ற போது தொழில்நுட்ப கோளாறில் சிக்கியிருக்கிறது. ஒருவேளை விமானிகள் இதை கவனிக்காமல் புறப்பட்டிருந்தால், பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 டிரீம்லைனர் விமானம் இன்று மாலை பெங்களூரில் தரைறயிறங்கியது. பின்னர் அடுத்த பயணத்திற்கு விமானம் சிறித நேரம் கழித்து புறப்பட தயாரானது. ஆனால், அப்போது எதிர்பாராத விதமாக, எரிபொருள் சுவிட்ச் தானாகவே 'Run' நிலையில் இருந்து 'Cutoff' நிலைக்கு மாறியிருக்கிறது.

கடந்த ஆண்டு அகமதாபாத்தில் நடந்த விமான விபத்திலும், இதேபோன்று தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஒருவேளை விமானிகள் இந்த தொழில்நுட்ப கோளாறை கவனிக்காமல், விமானத்தை இயக்கியிருந்தால் அகமதாபாத்தில் நடந்ததை போன்று விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.
என்ன நடந்தது?
லண்டன் ஹீத்ரோவிலிருந்து பெங்களூருக்கு இன்று மாலை ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 டிரீம்லைனர் விமானம் (AI 132) பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானம் பெங்களூரு வந்தடைந்த பிறகு, மீண்டும் என்ஜினைத் தொடங்கும் முயற்சியின் போது, இடது பக்க எரிபொருள் சுவிட்ச் 'Run' நிலையில் நிற்காமல், இரண்டு முறை 'Cutoff' நிலைக்குத் தானாகவே மாறியுள்ளது.
இந்த முரண்பாட்டைக் கவனித்த விமானி, இது குறித்து உடனடியாகப் புகாரளித்தார். அதன் பின்னரே பாதுகாப்பு கருதி அந்த விமானம் தரையிறக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
ஏன் இந்த பிரச்சனை முக்கியம்?
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு மிகவும் தீவிரமாகப் பார்க்கப்படக் காரணம், கடந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி அகமதாபாத்தில் நடந்த பயங்கர விபத்துதான். அகமதாபாத்திலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் (AI 171) டேக்-ஆஃப் ஆன 32 வினாடிகளில் விழுந்து நொறுங்கியது. இதில் 260 பேர் உயிரிழந்தனர்.
அந்த விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையில், விமானம் கிளம்பிய சில வினாடிகளிலேயே இரண்டு என்ஜின்களின் எரிபொருள் சுவிட்சுகளும் ஒரு வினாடி இடைவெளியில் 'Run' நிலையிலிருந்து 'Cutoff' நிலைக்கு மாறியது கண்டறியப்பட்டது.
விமான விபத்தில் என்ன நடந்தது?
விபத்தில் சிக்கி விமானத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பிளாக் பாக்ஸில், காக்பிட்டில் விமானிகள் பேசியது பதிவாகியிருந்தது. பதிவில் ஒரு விமானி "ஏன் சுவிட்சை ஆஃப் செய்தாய்?" என்று கேட்க, மற்றொருவர் "நான் செய்யவில்லை" என்று பதிலளித்தது பதிவாகியுள்ளது. இது மனிதத் தவற்றா அல்லது இயந்திரக் கோளாறா என்ற விவாதம் இன்றும் நீடிக்கிறது.
ஏன் இந்த ஸ்விட்ச் முக்கியம்?
இந்த ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டு Run நிலையில் இருந்தால், எரிபொருள் பாயும், என்ஜின் இயங்கும். அதுவே Cutoff நிலையில் இருந்தால் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும், என்ஜின் அணைக்கப்படும். பொதுவாக இந்த சுவிட்சுகளைத் தற்செயலாக மாற்ற முடியாது. அதை மேலே தூக்கிப் பிடித்த பின்னரே நகர்த்த முடியும். இருப்பினும், தற்போது ஏற்பட்டுள்ள கோளாறு இந்த லாக் முறையையும் தாண்டி சுவிட்ச் மாறுவதைக் காட்டுகிறது.
விமானத்தில் ஆய்வு
அகமதாபாத் விபத்திற்குப் பிறகு, ஏர் இந்தியாவின் அனைத்து டிரீம்லைனர் விமானங்களும் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது எந்தக் கோளாறும் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது மீண்டும் ஒரு விமானத்தில் அதே போன்ற கோளாறு கண்டறியப்பட்டுள்ளது பயணிகள் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications