தீபாவளி முடிந்து பணிக்கு வந்த பெங்களூர் ஊழியர்.. விமானத்தில் இறங்கியதும் அமேசான் கொடுத்த ஷாக்.. வேலை போச்சி
பெங்களூர்: தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் பெங்களூரில் பணிக்கு திரும்பிய அமேசான் ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெங்களூரில் தரையிறங்கியதும் அவர் தனது செல்போனை ஆன் செய்தபோது பணியில் இருந்து நீக்கிவிட்டதாக அமேசான் நிறுவனம் இ-மெயில் அனுப்பி உள்ளது. இதனால் அந்த ஊழியர் கலங்கிப்போனார்.
உலகில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று அமேசான். ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங், ஏஐ உள்பட பல்வேறு சேவைகளை அமேசான் வழங்கி வருகிறது. அமேசான் நிறுவனம் ஏஐ, ரோபாக்களை பணிக்கு பயன்படுத்துவதை அதிகரித்து வருகிறது.

இதனால் ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். மொத்தம் 6 லட்சம் ஊழியர்கள் வரை அடுத்த சில ஆண்டுகளில் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முதற்கட்டமாக கடந்த 28 ம் தேதி முதல் 14,000 ஊழியர்களை உலகம் முழுவதும் பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. ஊழியர்களுக்கு இ-மெயில், மெசேஜ், போன்கால் மூலமாக பணி நீக்கம் குறித்த அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் தீபாவளி விடுமுறை முடிந்து அமேசான் ஊழியர் பெங்களூருவுக்கு திரும்பியபோது அவருக்கு பணி நீக்கம் தொடர்பான இ-மெயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெண் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ‛‛எனது நண்பர் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தீபாவளி விடுமுறையை முடித்து மீண்டும் பணிக்காக அவர் பெங்களூர் வந்துஇறங்கினார். அவர் பெங்களூரில் தரையிறங்கிய சிறிது நேரத்தில் அவர் தனது செல்போனை ஆன் செய்தார். அப்போது அமேசானில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதாக இ-மெயில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது'' என கூறியுள்ளார்.
இதனை பார்த்த பலரும் அந்த ஊழியருக்காக வருத்தம் தெரிவித்தனர். ஒரு ஊழியர், ‛‛அமேசான் சார்பில் பணி நீக்க சம்பளம் (Severance Package) எதுவும் வழங்கினார்களா? இல்லாவிட்டால் வெறுமனே டாடா.. பாய்.. பாய்.. சொன்னார்களா?'' என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு அவர், ‛‛2 மாத சம்பளம் வழங்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.
இன்னொருவரோ, அமேசானால் தனது நண்பர் எப்படி பாதிக்கப்பட்டார்? என்பது பற்றி கூறியுள்ளார். இதுபற்றி அவர், ‛‛எனது நண்பர் அமேசானாில் பணியாற்றி வந்தார். அவரது பணிக்காக சமீபத்தில் பாராட்டு பெற்றார். கடந்த மாதம் மேனேஜர் லெவலுக்கான பணிக்கு அவர் புரோமோஷன் பெற்றார். ஆனால் இப்போது அவள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணி நீக்கம் என்று வந்துவிட்டால் இவர்கள் பெர்பாமன்ஸை பார்ப்பது இல்லை'' என்று கவலையை பகிர்ந்துள்ளார்.
முன்னதாக அமேசான் நிறுவனம் எச்ஆர் சார்பில் அனுப்பிய இ-மெயில் குறித்த முக்கிய தகவல் வெளியாகி இருந்தது. அதில், ‛‛‛‛உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு சில முக்கியமான விஷயம் உள்ளது.ஆனால் இது கடினமான செய்தியாக இருக்கிறது. எங்களின் நிறுவனம் முழுமையாக மதிப்பாய்வு செய்தது.
அதன்பிறகு அமேசான் முழுவதும் பணி நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளோம். துரதிர்ஷ்டவசமாக நீங்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறீர்கள். இந்த முடிவை நாங்கள் சாதாரணமாக எடுத்து விடவில்லை. கடினமாக தான் இந்த முடிவை எடுத்தோம். அடுத்த 90 நாட்கள் (3 மாதம்)முழு ஊதியம் மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications