பெங்களூர் தனியார் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய மாணவி.. சக மாணவிகள் ஆவேச போராட்டம்
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூர் அருகே கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தால் கல்லூரி நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தி அடைந்த சக மாணவிகள் போராட்டம் நடத்தியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேயை சேர்ந்த 19 வயதாகும் ஹர்ஷிதா என்பவர் கல்லூரி மாணவி ஆவார். இவர் பெங்களூரு புறநகர் மாவட்டம் சந்தாபுரா அருகே சூர்யாநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட கீலலகியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஇ படித்து வந்தார். அந்த தனியார் கல்லூரியையொட்டி உள்ள அக்கல்லூரி நிர்வாககத்திற்கு சொந்தமான விடுதியில் ஹர்ஷிதா தங்கி இருந்தார். அவருடன், மற்றொரு மாணவியும் உடன் தங்கி இருந்துள்ளார்.

அந்த மாணவி நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், விடுதி அறையில் தனியாக இருந்த மாணவி ஹர்ஷிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நேற்று காலையில் பக்கத்து அறையில் தங்கி இருந்த மாணவிகள் ஜன்னல் வழியாக பார்த்த போது ஹர்ஷிதா தூக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கியபடி இருந்தார். உடனேஅதிர்ச்சி அடைந்த மாணவிகள் கதவை உடைத்து மாணவியை மீட்க முயன்றனர். ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்திருந்ததை கண்ட கதறி அழுதனர்.
இதனிடையே மாணவி தற்கொலை குறித்து பெங்களூர் புறநகர் மாவட்டம சூர்யாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது ஏன் என்று விசாரித்தனர். இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் ஹர்ஷிதாவுக்கு தொல்லை கொடுத்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்ததாகவும் சக மாணவிகள் குற்றம்சாட்டினர். இதனிடையே ஹர்ஷிதாவின் தற்கொலைக்கான சரியான காரணம் என்ன? என்பது தெரியவில்லை என்று கூறப்படுவதால் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், கல்லூரி மாணவி ஹர்ஷிதாவின் சாவுக்கு நியாயம் கேட்டு சக மாணவிகள் நேற்று கல்லூரி வளாகத்தில் திடீரென போராட்டத்தில் இறங்கியதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், கல்லூரி நிர்வாகமும் மாணவியிடம் சமாதானம் பேசியது. தொடர்ந்து மாணவிகள்போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து சூர்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications