மீண்டும் பாஜக ஆட்சி? 'மைனஸ்' ஆனாலும் வெற்றிக்கோட்டை நெருங்குகிறதா? Edupress group கணிப்பு ரிசல்ட்!
பெங்களூர் : கர்நாடகாவில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என Edupress group நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 25 முதல் 30ஆம் தேதி வரை Edupress group சார்பில் கர்நாடகாவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி வரும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக 110-120 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 70-80 இடங்களிலும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா தேர்தல்
கர்நாடக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ், மஜத என அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. 124 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையே அறிவித்து விட்டது காங்கிரஸ் கட்சி. ஏப்ரல் முதல் வாரத்தில் பாஜக தேர்தல் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தும் பாஜக
இந்நிலையில், கர்நாடகாவில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், Edupress group, கர்நாடகாவின் 50 தொகுதிகளைச் சேர்ந்த 18,331 வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்பை நடத்தியது. கடந்த மார்ச் 25 முதல் 30ஆம் தேதி வரை Edupress group சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, பாஜக 110-120 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 70-80 இடங்களிலிம், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 10-15 இடங்களையும் மற்றவை 4-9 இடங்களையும் கைப்பற்றக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பாஜக ஆட்சி
இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவில் கர்நாடகாவில் மொத்த வாக்குகளில் பாஜக 43 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 37 சதவீத வாக்குகளையும் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும், உட்கட்சிப் பூசல்களும் பாஜகவை பாதிக்கும் என்றாலும், பாஜக ஆட்சியே நீடிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான வாக்காளர்கள் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டம்
Edupress group நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது கர்நாடகாவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பு பற்றிப் பேசியுள்ள Edupress group தலைவரும் கருத்துக்கணிப்பு ஆய்வாளருமான ஜார்ஜ்குட்டி, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சமயத்தில் பாஜக, காங்கிரஸை அதிக சீட்களைக் கைப்பற்றுவதாகத் தெரிகிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் மீண்டும் கருத்துக்கணிப்பை நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications