"பட்டாசு மீது உட்காரு.. ஆட்டோ வாங்கி தரோம்.." நண்பர்கள் சவாலால் பறிபோன உயிர்.. பெங்களூரில் கொடூரம்
பெங்களூர்: தீபாவளியன்று நண்பர்கள் பெட் கட்டியதால் இளைஞர் ஒருவர் பட்டாசு மீது அமர்ந்துள்ளார். அந்த பட்டாசு வெடித்து சிதறியதில், 32 வயதான அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்து 6 பேரைக் கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.
தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான். தீபாவளியன்று பொதுமக்கள் பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்பது குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

ஆனாலும், சிலர் இதை எதுவும் கேட்காமல் ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடிக்கிறார்கள். இதனால் சில நேரங்களில் மோசமான விபத்துகளும் நடந்து விடுகிறது. அப்படியொரு சம்பவம் தான் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடந்துள்ளது.
ஷாக் சம்பவம்: அப்படியொரு ஷாக் சம்பவம் தான் கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடந்துள்ளது. அங்கு 32 வயது நபர் ஒருவர் தீபாவளி அன்று பட்டாசு மீது அமர்ந்துள்ளார். நண்பர்கள் விடுத்த சேலஞ்சிற்காக அவர் பட்டாசு மீது அமர்ந்துள்ளார். இதற்கிடையே பட்டாசு வெடித்ததில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
யார் அவர்: உயிரிழந்த அந்த நபர் சபரீஷ் என்ற அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி நாளில் சபரீஷும் அவரது நண்பர்களும் ஒன்றா மது குடித்துள்ளனர்.

என்ன நடந்தது: மது குடித்துவிட்டு வரும் போது நண்பர்கள் இணைந்து சபரீசுக்கு ஒரு பெட் வைத்துள்ளனர். அதாவது பட்டாசு வெடிக்கும் போது அதன் மீது உட்கார்ந்து காட்டினால் ஆட்டோ வாங்கித் தருவதாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். சபரீஷ் வேலையில்லாமல் இருந்த நிலையில், நண்பர்களின் இந்த விபரீத யோசனைக்கு அவர் ஒப்புக் கொண்டார். மேலும், மது போதையில் இருந்ததால் சபரீஷுக்கும் சரி, அவரது நண்பர்களுக்கும் சரி என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை.
சாலையில் ஒரு பெட்டியை எடுத்து அதில் சபரீஷை அமர சொன்ன அவரது நண்பர்கள், அதில் பட்டாசை வைத்துள்ளனர். பட்டாசை பற்ற வைத்தவுடன் அவரது நண்பர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். சபரீஷ் அதன் மீது உட்கார்ந்துள்ளார். சில நொடிகளில் பட்டாசு வெடித்த நிலையில், இதில் அவர் படுகாயமடைந்தார். சபரீஷ் எழுந்து கூட முடியாத அளவுக்குச் சிரமப்பட்டார். அப்போது அவரை சூழ்ந்த நண்பர்களுக்கும் என்ன நடந்தது என்றே புரியவில்லை. இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
உயிரிழப்பு: பட்டாசு வெடித்ததில் சபரீஷ் படுகாயமடைந்த நிலையில், அவரது நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் அவர் கடந்த நவம்பர் 2ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினர். இந்த விவகாரத்தில் இதுவரை 6 பேரை கைது செய்துள்ள கர்நாடக போலீசார், அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
32-yr-old Shabarish d!ed after a box of Crackers burst under his butt in Konanakunte, South Bengaluru. His friends had promised to buy him an autorickshaw if he won the challenge of sitting on a box of bursting crackers
— Ghar Ke Kalesh (@gharkekalesh) November 4, 2024
pic.twitter.com/OHaxgOG2Oj
போலீசார் தகவல்: இது தொடர்பாக தெற்கு டிசிபி லோகேஷ் கூறுகையில், "சபரீஷ் வேலையில்லாமல் இருந்துள்ளார். இதன் காரணமாகவே ஆட்டோ வாங்கி தருவதாக அவரது நண்பர்கள் கூறியதைக் கேட்டு இந்த விபரீதத்தைச் செய்துள்ளார். இது குறித்து 6 பேரைக் கைது செய்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications