11 மாநிலங்கள்! 84 வங்கிகள்! ரூ 854 கோடி மோசடி செய்த 6 பேர் கைது.. விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
பெங்களூர்: கிரிப்டோ கரன்சியில் முதலீடு என கூறி ஆசைவார்த்தை காட்டி ரூ 854 கோடியை அபேஸ் செய்த 6 பேரை பெங்களூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் ஒன்று தங்களிடம் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக வாட்ஸ் ஆப், டெலிகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளது. அந்த விளம்பரத்தை நம்பி கர்நாடகா, தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரா, பீகார், டெல்லி, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய 10 மாநிலங்களில் இருந்து பலர் முதலீடு செய்துள்ளனர்.

ஒரு நாளைக்கு ஆயிரம் முதல் ரூ 5000 வரை லாபம் ஈட்டலாம் என விளம்பரம் செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் இந்த கும்பலிடம் ரூ 10 ஆயிரம் முதல் லட்சக்கணக்கான தொகை வரை முதலீடு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பணத்தை மோசடி கும்பல் அனுப்பிய வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் ஆன்லைனில் செலுத்தியுள்ளனர். ஆனால் முதலீடு செய்த பிறகும் லாபமோ முதலீடு செய்த தொகையோ தரப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த முதலீட்டாளர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது எந்தவித பதிலும் அளிக்கவில்லை என தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் அளித்தனர். விசாரணையில் ஆயிரக்கணக்கானோரை இந்த கும்பல் ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரை சேர்ந்த மனோகர் என்பவரை போலீஸார் முதலில் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் அவருடைய கூட்டாளிகளான மனோகர், சீனிவாசன், சக்ரதர், சோமசேகர், பனீந்திரா ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்கள் பொதுமக்களிடம் ஏமாற்றிய ரூ 854 கோடியை கிரிப்டோ , பேமண்ட் கேட்வே, கேமிங் செயலிகள் உள்ளிட்டவைகளில் முதலீடு செய்துள்ளது தெரியவந்தது. இந்த மோசடியில் வேறு யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா என்பதை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் வாட்ஸ் ஆப்பில் வேலை தருகிறோம் என பொதுமக்களுக்கு குறுந்தகவல் அனுப்புவர்.
அதை பார்த்துவிட்டு வேலைக்காக அழைக்கும் நபர்களை டெலிகிராம் குரூப்பில் சேர்த்துவிடுவர். அதன் பின்னர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் கொள்ளை லாபம் என கூறி பெரிய தொகையை வசூல் செய்தனர். இந்த கும்பல் மீது நாடு முழுவதும் 5013 வழக்குகள் பதிவாகியுள்ளன. பெங்களூரில் மட்டும் 17 வழக்குகள் உள்ளன.
மோசடி செய்த பணத்தை உள்நாடு, வெளிநாடுகளில் உள்ள 84 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். இந்த கும்பலிடம் ரூ 5 கோடியை போலீஸார் பறிமுதல் செய்தனர். மீதம் உள்ள பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிரது. இந்த மோசடியில் பெரிய நெட்வொர்க்கே இருக்கும் என தெரிகிறது. இந்த 6 பேர் இல்லாமல் இன்னும் பலர் கைதாகவும் வாய்ப்புள்ளது.
கைதானவர்களிடம் இருந்து 13 செல்போன்கள், 7 லேப்டாப்கள், ஸ்வைப்பிங் இயந்திரங்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications