பூந்தொட்டியில் புதுமை.. வீட்டுக்குள்ளேயே கஞ்சா தோட்டம்.. பெங்களூரு போலீஸை மிரள வைத்த அமெரிக்கர்
பெங்களூர் : பெங்களூருவில் வீட்டுக்குள் கஞ்சா செடி வளர்த்த அமெரிக்காவை சேர்ந்த உடற்பயிற்சியாளரை கர்நாடகா மாநில போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்தியாவை பொறுத்தவரை கஞ்சா செடிகளை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றம். கஞ்சா பயன்படுத்துவதும், விற்பனை செய்வதும் கடுமையான குற்றம் ஆகும். மருத்துவ பயன்பாட்டிற்காக மட்டுமே சில நேரங்களில் கஞ்சா பயன்படுத்தப்படுகிறது. இந்த சூழலில் கஞ்சாவை போதை பொருளாக பயன்படுத்துவது இந்தியாவில் அதிகமாக உள்ளது. கஞ்சா விற்பனை பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோதமாக நடக்கிறது. சில மலைப்பகுதிகளில் கஞ்சா பயிரிடுவதும் சட்டவிரோதமாக நடக்கிறது.

கர்நாடகத்தை பொறுத்தவரை அம்மாநில தலைநகர் பெங்களூருவில் கஞ்சா விற்பனை அதிகமாகவே உள்ளது. இது தொடர்பாக பலர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ளது போல், வீட்டுக்குள்ளேயே நவீன முறையில் கஞ்சா செடிகளை வளர்த்து விற்பதும் அண்மை காலமாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் பெங்களூரு பானசவாடி பகுதியில் நடந்துள்ளது.
பெங்களூரு பானசவாடியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அந்த குறிப்பிட்ட வீட்டில் அதிரடி சோதனை செய்தனர். அங்கு எல்.இ.டி. பல்பு உதவியுடன் நவீன முறையில் உயர்ரக கஞ்சா செடிகளை பூந்தொட்டியில் வைத்து வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
யார் இந்த கஞ்சா செடியை வளர்த்து வந்தது என்று விசாரணையில் இறங்கிய போலீசார் அமெரிக்காவைச் சேர்ந்தவர் தான் இப்படி செய்தது கண்டுபிடித்தனர். விசாரணையில் அவரை பற்றி சில தகவல்கள் போலீசுக்கு தெரியவந்தது. கடந்த 10 ஆண்டுகளாக பானசவாடி பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து அமெரிக்க நாட்டை சேர்ந்த இளைஞர் வசித்து வந்ததுடன், அப்பகுதியில் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் நவீன முறையில் வீடுகளில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததும், அவர் கலப்பின உயர்ரக கஞ்சா செடிகளை வளர்த்ததும், இந்தவகையில் ஒரு கஞ்சா செடியில் ஒரு கிலோ கஞ்சா உற்பத்தி ஆகும் என்பதும் கர்நாடகா போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பானசவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அமெரிக்க இளைஞரை கைது செய்தனர், அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து பூந்தொட்டியுடன் கஞ்சா செடி, எல்.இ.டி.பல்புகள், செல்போன் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications