‛சுயஇன்பம்’.. ரேபிடோ பைக்கில் பயணித்த பெண்! எல்லை மீறிய ஓட்டுநரால் பெங்களூரில் ஷாக்! என்ன நடந்தது?
பெங்களூர்: மணிப்பூர் வன்முறைக்கு எதிராக பெங்களூரில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண் தனது வீட்டுக்கு ரேபிடோ பைக்கில் பயணித்தபோது அதன் ஓட்டுநர் சுயஇன்பம் செய்ததோடு போன் மற்றும் மெசேஜில் ‛லவ் யூ' என கூறி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ம் தேதி குக்கி-மைத்தேயி மக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே தான் பைனோம் எனும் கிராமத்தில் 2 குக்கி பழங்குடி பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் கடந்த மே மாதம் 4ம் தேதி நடந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வீடியோவாக வெளியாகி வெளியுலகிற்கு தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையே மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போர்க்கொடி உயர்த்தின. இதனால் நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்களும் நாடாளுமன்றம் முடங்கியது. மேலும் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அந்த வகையில் பெங்களூர் டவுன் ஹாலில் நேற்று மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். பெங்களூர் தெற்கு பகுதியில் வசித்து வரும் பெண் ஆர்வலர் ஒருவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தை முடித்து கொண்டு அவர் தனது வீட்டுக்கு கிளம்பினார்.
அப்போது அவர் ரேபிடோ பைக் செயலி மூலம் ஆட்டோ முன்பதிவு செய்தார். ஆனால் பல ஆட்டோக்கள் அவரது முன்பதிவை கேன்சல் செய்தன. இதனால் ரேபிடோ பைக் செயலி மூலம் பைக் முன்பதிவு செய்தார். அப்போது பைக் ஓட்டிய நபர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் பயணி பின்னால் இருக்க சுயஇன்பம் செய்துள்ளார். இதனால் அந்த பெண் பயணி அதிர்ச்சியடைந்துள்ளார். இருப்பினும் அவர் தனது பாதுகாப்பு கருதி சத்தம் எதுவும் போடாமல் வீட்டுக்கு இறங்கி சென்றார்.
அதன்பிறகு அந்த பெண் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛மணிப்பூர் வன்முறையை கண்டித்து பெங்களூர் டவுன்ஹாலில் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு வீட்டுக்கு ரேபிடோ பைக்கில் புறப்பட்டேன். ஆச்சரியம் என்ற வென்றால் டிரைவர் வேறு பைக்கில் வந்தார். இருப்பினும் எனது முன்பதிவை செயலியில் சரிபார்த்தேன். அது சரியாக இருந்ததால் பைக்கில் பயணித்தேன்.
இந்த வேளையில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்றபோது ஓட்டுனர் ஒரு கையால் பைக் ஓட்டினார். மேலும் பைக் ஓட்டியபடியே சுயஇன்பம் செய்தார். இந்த வேளையில் நான் பயந்தாலும் எனது பாதுகாப்பு கருதி அமைதியாக இருந்தேன். மேலும் நான் இறங்கி செல்ல வேண்டிய இடத்துக்கு 200 மீட்டருக்கு முன்பே நான் இறங்கிவிட்டேன்.

இதையடுத்து அந்த நபர் எனக்கு போன் செய்தார். மேலும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்தார். நான் அவரது செல்போன் எண்ணை பிளாக் செய்துவிட்டேன். தற்போது அவர் வேறு எண்களில் இருந்து எனக்கு போன் செய்கிறார். ரேபிடோ தனது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்'' என தெரிவித்து இருந்தார்.
மேலும் போன் செய்த பிறகு அந்த ஓட்டுநர் வாட்ஸ்அப்பில் செய்த மெசேஜை அவர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் அந்த ஓட்டுநர் மாலை 6.46 மணிக்கு பெண்ணுக்கு ‛ஹாய்' என வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்துள்ளார். மேலும் ஹார்ட்டின் வடிவம் அடங்கிய 2 இமோஜிகளையும் அனுப்பி உள்ளார்.
இதனை பார்த்த அந்த பெண் ‛‛ஏன் எனக்கு போன் செய்கிறீர்கள். ஆன்லைனின் பணம் செலுத்தி விட்டேன். செயலியை செக் செய்யுங்கள்'' என தெரிவித்து இருந்தார். இதற்கு அந்த நபர், ‛‛ப்ளீஸ்'' என மெசேஜ் செய்தார். அதற்கு ‛‛என்ன'' என அந்த பெண் கேட்க, அந்த ஓட்டுநர் ‛‛ப்ளீஸ் மேம்.. லவ் யூ'' என வழிந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் அவரை பிளாக் செய்தார்.
இந்த ட்விட்டர் பதிவை பார்த்த பெங்களூர் மாநகர போலீசார் ட்விட்டர் பக்கத்தில், ‛‛நாங்கள் சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க எஸ்ஜே பார்க் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். உங்களின் தொடர்பு எண்ணை தனியே மெசேஜ் அனுப்புங்கள்'' என கேட்டனர். அதன்படி தற்போது சம்பவம் குறித்து எஸ்ஜே பார்க் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications