30 செ.மீ மழை பெய்தும் உடனே மீண்ட சென்னை.. 15 செ.மீ மழைக்கே தத்தளிக்கும் பெங்களூர்! காரணம் என்ன?
பெங்களூரின் வடக்கு பகுதிகளில் நேற்று பெய்த கன மழை, நகரின் உள்கட்டமைப்பு மற்றும் திட்டமிடலில் உள்ள குறைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சவுடேஸ்வரி வார்டு, எலகங்கா, வித்யாரண்யபுரா போன்ற பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலை, சென்னையில் சமீபத்தில் பெய்த மழையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மேலும் தெள்ளத் தெளிவாகிறது. சென்னையில் 24 மணி நேரத்தில் 30 செ.மீ வரை மழை பெய்த போதிலும், பெங்களூரில் பெய்த 15 செ.மீ மழையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணங்கள் பல உள்ளன.

"சென்னையில் 30 செ.மீ மழை பெய்தும் பெங்களூர் போல் பாதிக்கப்படவில்லை" என்ற வாதம் இப்போது எழுந்துள்ளது. ஆனால், இந்த ஒப்பீடு எவ்வளவு நியாயமானது? பார்க்கலாம்.
பழைய பெங்களூர்: பெங்களூரின் பழைய பகுதிகளான பசவனகுடி, மல்லேஸ்வரம், மெஜஸ்டிக், ஜெயநகர் போன்றவை திட்டமிட்டு அமைக்கப்பட்டதால், மழை நீர் வடிகால் அமைப்புகள் சரியாக செயல்பட்டு, வெள்ள பாதிப்பு குறைவாக உள்ளது. மழை பெய்ததற்கான அடையாளமே அங்குள்ள பல பகுதிகளில் தெரியவில்லை.

புதிய பெங்களூர்: 1990களின் பிற்பகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியடைந்த பிறகு பெங்களூருடன் சேர்ந்து உருவான பகுதிகள் பெரும்பாலும் திட்டமிடாமல் விரிவடைந்துள்ளன. இதனால், மழை நீர் வடிந்து செல்லும் வசதிகள் போதுமான அளவில் இல்லாததால் வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது. ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள், சாக்கடை வசதிகளின் பற்றாக்குறை, மற்றும் மழைநீர் வடிகால் வசதிகளின் போதுமானமை போன்ற காரணிகள், புதிதாக சேர்ந்த பகுதிகளை கொண்ட, பெங்களூரில் வெள்ளத்தை அதிகரிக்கச் செய்துள்ளன.
சென்னை-பெங்களூர் ஒப்பீடு: சென்னையில் அக்டோபர் 15 முதல் 16ம் தேதிக்கு உட்பட்ட 24 மணி நேரத்தில், ஒரே நாளில் 30 செ.மீ மழை பெய்திருந்தாலும், பெங்களூரில் மழை குறைவுதான். வடக்கு பெங்களூரின் சவுடேஸ்வரி வார்டு பகுதியில்தான் அதிகபட்சமாக 15 செ.மீ மழை பெய்திருந்தது. ஆனாலும் சென்னையை ஒப்பிட்டால் எலகங்கா, சஹகார நகர் உட்பட வடக்கு பெங்களூரில் பாதிப்பு அதிகமாக உள்ளது. ரப்பர் படகுகளில் மக்கள் சாலையை கடந்துச் செல்கிறார்கள். இது, பெங்களூரின் உள்கட்டமைப்பு பலவீனத்தை எடுத்துக்காட்டுகிறது.

நகர்ப்புற திட்டமிடல்: சென்னை நகரம் நீண்ட காலமாக கன மழையை எதிர்கொண்டு வருவதால், மழை நீர் வடிந்து செல்லும் வசதிகள் ஆண்டுக்கு ஆண்டு மேம்படுத்தப்படுகின்றன. பெங்களூர் போன்ற வேகமாக வளர்ந்து வரும் நகரத்தில், இதுகுறித்தெல்லாம் இதுவரை யாரும் யோசித்தது இல்லை. ஏனெனில் இதமான வெயில், இதமான குளிர், இதமான மழை என்றே பழகிவிட்ட பெங்களூர்வாசிகளும், நிர்வாகமும், அது அதிகமாக போகும்போது என்ன செய்வது என்ற முன்திட்டமிடலில் இல்லை. வெயில் அதிகமானால் தண்ணீர் பஞ்சம், மழை அதிகமானால் வெள்ளம் என போராடி வருகிறது பெங்களூர்.
பெங்களூரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு, நகர்ப்புற திட்டமிடலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. திட்டமிடாமல் நகரங்கள் விரிவடைவதால், மழைக்காலங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பெங்களூரு போன்ற நகரங்கள், தங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, மழை நீர் வடிந்து செல்லும் வசதிகளை அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதற்காக, ஏரிகளை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்து, அவற்றின் நீர் பிடிப்புத் திறனை அதிகரிக்க வேண்டும். பெங்களூர் மழை, நமக்கு ஒரு பாடத்தை கற்றுத் தருகிறது. நாம் இயற்கையுடன் இணைந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், இயற்கை நம்மை தண்டித்துவிடக்கூடும்.












Click it and Unblock the Notifications