தண்ணீரை குடிக்க மட்டுமே பயன்படுத்தனும்.. அல்லது அபராதம்.. பெங்களூர் குடிநீர் வாரியம் வார்னிங்
பெங்களூர்: பெங்களூரில் தண்ணீரை பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை கழுவுதல், தோட்டம், கட்டுமான பணிகளுக்கு தண்ணீரை பயன்படுத்துவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது எனவும், இதனை மீறுவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.
பெங்களூரில் தற்போது கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. போர்வெல்கள் வற்றி உள்ள நிலையில் பொதுமக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் மற்றும் பிற பயன்பாட்டுக்கான தண்ணீரை அவர்கள் விலை கொடுத்தே வாங்கி வருகின்றனர்.

இன்னும் கோடைக்காலம் துவங்காத நிலையில் இப்போதே தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனால் வரும் நாட்களில் பெங்களூரின் நிலைமை என்பது இன்னும் மோசமாகும் என அஞ்சப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் பிடபிள்யூஎஸ்எஸ்பி (BWSSB) எனும் பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் பொதுமக்களுக்கு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.இந்த வாரியம் தான் பெங்களூரில் குடிநீர் வினியோகத்தை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக காவிரியில் இருந்து பெங்களூருக்கு குடிநீர் எடுத்து வந்த வினியோகிக்கிறது.
தற்போதைய சூழலில் பெங்களூர் மக்கள் இந்த வாரியத்தின் காவிரி நீரை தான் குடிநீருக்காக நம்பி உள்ளனர். இந்நிலையில் தான் தண்ணீரை தேவையின்றி பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த வாரியம் சார்பில், ‛‛பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். அதுமட்டுமின்றி தண்ணீரை தேவையின்றி பொதுமக்கள் பயன்படுத்த கூடாது. கார் உள்ளிட்ட வாகனங்களை சுத்தம் செய்வது, தோட்ட பராமரிப்புக்கு தண்ணீர் விடுவது, செயற்கை நீரூற்றுகளுக்கு தண்ணீரை பயன்படுத்துவது, கட்டுமானங்களுக்கு தண்ணீரை பயன்படுத்துவது, கட்டுமான பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கு தண்ணீரை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக தியேட்டர் மற்றும் வணிக வளாகங்களில் தண்ணீரை குடிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் என்பது விதிக்கப்படும். அதாவது இந்த உத்தரவை மீறினால் முதலில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதன்பிறகு 2வது முறை என்றால் ரூ.5,500, 3வது முறை என்றால் ரூ.6,000 என ரூ.500-யை சேர்த்து அபராதம் விதிக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications