மங்களூரை மிரள வைத்த வங்கிக் கொள்ளை! நெல்லையில் சிக்கிய கொள்ளையர்கள்.. சீறிய கர்நாடகா போலீசின் தோட்டா
பெங்களூர்: மங்களூரில் கூட்டுறவு வங்கியில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு கிலோ தங்க நகைகள் 3 லட்சம் ரொக்கமாகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நெல்லையில் மூன்று கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர் இந்த நிலையில் அவர்களை மங்களூரு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்த போது போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது இதில் காயமடைந்த கொள்ளையர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள உல்லல் கூட்டுறவு வங்கி. கடந்த 11ஆம் தேதி 11 மணி அளவில் திடீரென அந்த வங்கிக்குள் புகுந்த முகமூடி கும்பல் கை துப்பாக்கி மற்றும் கத்தியை வைத்து மிரட்டி பணியிலிருந்த ஊழியர்களை மிரட்டியது.

இதனால் அச்சமடைந்த அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்ற நிலையில் துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டிய அந்த கும்பல் 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை அள்ளிச் சென்றது.
தகவல் அறிந்து வந்த மங்களூர் மாநகர காவல் துறை அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாதது தெரிய வந்தது. அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை பரிசோதனை செய்தபோது கொள்ளையர்கள் போலியான பதிவெண் கொண்ட கார்களில் வந்து வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதும், பின்னர் தப்பிச் சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து அந்த கார்கள் கேரளா நோக்கி சென்றதும் தெரிய வந்ததது.
கருப்பு நிற ஃபியட் காரில் கொள்ளையர்கள் தப்பி சென்றது தெரியவந்த நிலையில் சுங்கச்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மும்பை சென்று கண்ணன் மணி என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் கண்ணன் மணி என்பதும், அவருடன் மேலும் இரண்டு பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதை எடுத்து கண்ணன் மணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 17ஆம் தேதி வங்கியில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர், வட மாநிலங்களைச் சேர்ந்த 17 பேர் என மொத்தம் 20 பேர் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்ததும், கொள்ளையடித்த பணத்தை தனித் தனியாக பங்கு போட்டு கொண்டு வேறு பகுதிகளுக்கு சென்றது தெரிய வந்தது. கண்ணன் மணி உள்ளிட்ட மூன்று பேரும் மும்பைக்குச் சென்ற நிலையில் போலீசார் தங்கள் இருக்கும் பகுதியை கண்டறிவதை அறிந்து நெல்லை வர திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் கண்ணன் மணி மட்டும் நெல்லை வரவில்லை. இதற்கிடையே கண்ணன் மணியின் கூட்டாளிகளான யோசுவா மற்றும் முருகாண்டி நெல்லை மாவட்டம் வந்துள்ளனர். கண்ணன் மணி மும்பையில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் அளித்த தகவலின் பெயரில் 20ஆம் தேதி நெல்லை வந்த மங்களூர் போலீசார் நெல்லை மாவட்ட போலீசார் உதவியுடன் யோசுவா மற்றும் முருகாண்டியை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஒன்றரை கோடி மதிப்புள்ள இரண்டு கிலோ தங்க நகைகள், இரண்டு நாட்டு துப்பாக்கிகள், மூன்று தோட்டக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை அடுத்து அவர்கள் இன்று நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மங்களூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து கொள்ளையர்கள் மூன்று பேரையும் மங்களூர் அழைத்துச் சென்ற போலீசார் வங்கி கொள்ளை நடைபெற்ற இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கண்ணன் மணி அங்கிருந்த உடைந்த பாட்டிலைக் கொண்டு போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மூன்று போலீசார் காயமடைந்த நிலையில் தற்காப்புக்காக கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அவர்கள் காயமடைந்த நிலையில் தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்லையில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் மீது மங்களூரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications