மெட்ரோ ரயிலில் லக்கேஜ் கட்டணம் உண்டு! மீறினால் என்ன நடக்கும் தெரியுமா? பெங்களூரில் விவாதமான சம்பவம்
பெங்களூர்: பெங்களூர் மெட்ரோ ரயிலில் பயணித்த பயணிக்கு லக்கேஜ் கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்பட்டது. இதுபற்றி அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் தான் லக்கேஜ் கட்டணம் குறித்து பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. எந்த மாதிரியான லக்கேஜ்களுக்கு தனி கட்டணம் வசூலிக்கப்படும்? லக்கேஜ் டிக்கெட் எடுக்காவிட்டால் என்ன தண்டனை விதிக்கப்படும்? என்பது பற்றி விளக்கம் தரப்பட்டுள்ளது.
பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் விரைவாக பயணிக்க முடியும் என்பதால் மெட்ரோ ரயிலை தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் பெங்களூர் நகர் முழுவதும் மெட்ரோ ரயில் சேவை உள்ளதா? என்றால் இல்லை.

குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. அதன்படி பெங்களூர் சல்லக்கட்ட முதல் ஓயிட்பீல்டு வரையும், மாதவராவில் இருந்து கனகபுரா ரோடு சில்க் ரோடு வரையும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. சமீபத்தில் அதாவது ஆகஸ்ட் 10ம் தேதி பெங்களூர் ஆர்வி ரோடு முதல் பொம்மச்சந்திரா வரை மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.
பெங்களூரை எடுத்து கொண்டால் 3 வழித்தடங்களையும் சேர்த்து மொத்தம் 96 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன. மேலும் மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்தும் வகையில் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் தான் மெட்ரோ ரயலில் லக்கேஜ் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பெங்களூர் மெட்ரோ ரயிலில் அவினாஷ் சன்சால் என்பவர் பயணம் செய்தார். அப்போது அவரிடம் லக்கேஜ்க்கு தனி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளார். அவினாஷ் சூட்கேஸ் கொண்டு சென்ற நிலையில் அவரிடம் தனி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவினாஷ் அதிருப்தி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‛‛நான் லக்கேஜ்க்காக பெங்களூர் மெட்ரோவில் ரூ.30 கட்டணம் செலுத்தினேன். மெட்ரோ ரயில்களை எடுத்து கொண்டால் நாட்டிலேயே பெங்களூரில் தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது லக்கேஜ் கட்டணம் கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் மெட்ரோ ரயில் சேவையை பொதுமக்கள் தவிர்ப்பதற்கான பிஎம்ஆர்சிஎல்-லின் மற்றொரு நடவடிக்கை இதுவாகும்'' என தெரிவித்து இருந்தார்.
இதில் அவர் பிஎம்ஆர்சிஎல் என்று பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகத்தை குறிப்பிட்டு இருந்தார். அவரது இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகத்தை விமர்சனம் செய்ய தொடங்கினர். இந்நிலையில் தான் பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛மெட்ரோ ரயிலில் 60 செமீ நீளம், 40 செமீ அகலம் , 25 செமீ உயரம் உள்ள 15 கிலோ எடையுள்ள பையை இலவசமாக எடுத்து செல்லாம். ஒரு பயணி கூடுதல் பை மற்றும் பெரிய பையை எடுத்து செல்ல விரும்பினால் ஒரு பைக்கு ரூ.30 கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறுவது கட்டாயம்.
இந்த லக்கேஜ் டிக்கெட்டை பயணிகள், வாடிக்கையாளர் சேவை மையத்தில் பெறலாம். இந்த கட்டண நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. இது புதிய நடைமுறை இல்லை. கூடுதல் பையை எடுத்து செல்ல டிக்கெட் வாங்கவில்லை என்றால் ரூ.250 அபராதம் விதிக்கப்படும். அதேபோல் பாதி வழியில் அந்த பயணிகளை ரயிலில் இருந்து இறக்கிவிடவும் விதியில் இடம் உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications