தெருநாய் தொல்லை இனி இல்லை.. பெங்களூருக்கு ஆறுதல் நியூஸ் சொன்ன அமைச்சர்
பெங்களூர்: பெங்களூரை தெருநாய்கள் இல்லாத மாநிலமாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கர்நாடக மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரபு சவுகான் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் நாய் தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. வெறிநாய்கடி தொடர்பாக பல்வேறு புகார்கள் குவிந்தன. அதிலும் குறிப்பாக இரவில் நடந்து போவோர், பைக்கில் போவோரை நாய்கள் விரட்டி கடிக்கின்றன. இதனையடுத்து பெங்களூரை தெருநாய்கள் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரபு சவுகான், பெங்களூருவை தெருநாய்கள் இல்லாத மாநிலமாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தெரு நாய்களைப் பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தெருநாய்களை பிடித்து தடுப்பூசிகளை செலுத்தி, காப்பகத்தின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அங்கு தெருநாய்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இனி தெருநாய்களால் மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது எனவும் சவுகான் உறுதியுடன் கூறினார். '
தெருநாய்களின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த கருத்தடை தடுப்பூசி போடுவது தொடர்பாக பெருநகர் பெங்களூர் மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சவுகான் ஆலோசனையும் மேற்கொண்டார். கால்நடைத்துறை அதிகாரிகள் அளித்த அனைத்து விவரங்களின் அடிப்படையில் பெங்களூருவை தெரு நாய்கள் இல்லாத நகரமாக மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் சவுகான் தெரிவித்தார்.
பெங்களூருவில் பி.பி.எம்.பி ஆண்டுதோறும் 45 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்தபோதிலும், நகரத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications