பெற்ற மகளை 4வது மாடி பால்கனியில் இருந்து வீசி கொன்ற கொடூர தாய்.. ‘பகீர்’ கிளப்பிய சிசிடிவி காட்சி!
பெங்களூர் : மன வளர்ச்சி குன்றிய தனது 4 வயது பெண் குழந்தையை 4வது மாடியில் இருந்து தூக்கி எறிந்து பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது மகளை பால்கனியில் இருந்து தூக்கி எறிந்த பின்னர் தாயும் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அதற்குள் அக்கம்பக்கத்தினரும், அப்பெண்ணின் கணவரும் அவரை மீட்டனர்.
பெற்ற தாயே குழந்தையை மாடியிலிருந்து கீழே போட்டு கொன்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா தம்பதி
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் எஸ்.ஆர்.நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கிரண் மற்றும் சுஷ்மா தம்பதி வசித்து வருகின்றனர். கிரண் சாஃப்ட்வேர் என்ஜினியராகவும், சுஷ்மா பல் மருத்துவராகவும் உள்ளனர். இவர்களுக்கு 4 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தை பிறந்தபோதே மாற்றுத்திறனாளியாக இருந்துள்ளது. வாய் பேச முடியாமலும், காது கேட்காமலும், மன வளர்ச்சி குன்றியும் இருந்த அந்தக் குழந்தையின் நிலை, தாய் சுஷ்மாவுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையை வீசிய தாய்
இந்நிலையில், நேற்று மாலை, சுஷ்மா அவர் வசிக்கும் வீட்டின் நான்காவது மாடி பால்கனியில் தனது 4 வயது பெண் குழந்தையை கையில் தூக்கி வைத்துக்கொண்டு நின்றுள்ளார். அப்போது திடீரென்று அந்த குழந்தையை நான்காவது மாடியில் இருந்து கீழே தூக்கி வீசியுள்ளார். இதில் அந்தக் குழந்தை சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

தற்கொலை முயற்சி
குழந்தையை கீழே வீசிய அடுத்த சில விநாடிகளில் சுஷ்மாவும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதற்காக பால்கனி தடுப்பு கம்பி மீது ஏறியுள்ளார். அதற்குள் அக்கம்பக்கத்தினர் மற்றும் அவரது கணவர் அங்கு வந்து சுஷ்மாவை தடுத்து, மீட்டனர். மன உளைச்சலால் பெற்ற குழந்தையை தாயே கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
|
சிசிடிவி காட்சி
இந்தச் சம்பவத்தை அடுத்து உடனடியாக பெண்ணின் கணவர் காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில் சுஷ்மா கைது செய்யப்பட்டுள்ளார். சம்பங்கி ராம்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொலைத்து விட முயற்சி
ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மன வளர்ச்சி குன்றிய தனது மகளை ரயில் நிலையத்தில் அனாதையாக விட்டுச் சென்றுள்ளார் தாய் சுஷ்மா. ஆனால், விஷயத்தை அறிந்த சுஷ்மாவின் கணவர், அங்கும் இங்கும் தேடி, குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், தற்போது, அந்தக் குழந்தையை மாடியிலிருந்து வீசி கொன்றுள்ளார் சுஷ்மா.












Click it and Unblock the Notifications