கர்நாடகா தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடி அத்தனை செய்துள்ளாரா.. எல்லாமே வீண்! பாஜகவினர் வேதனை
பெங்களூர்: கர்நாடகாவில் சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி என்னென்ன செய்துள்ளார் தெரியுமா? ஆனால் இத்தனையும் வாக்குகளாக மாறாதது பாஜகவினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 10 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது .இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இந்த தேர்தலில் 126 இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.
224 சட்டசபை தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வென்றால் பெரும்பான்மை பலம் கிடைத்து ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும். காங்கிரஸ் கட்சி 126 தொகுதிகளில் வென்று அத்துடன் 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

பாஜகவோ 60 தொகுதிகளில் வென்றுள்ளது 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மஜத 19 தொகுதிகளில் வென்றுள்ளது. இந்த நிலையில் பாஜக எப்படியாவது இந்த முறை ஆட்சியை தக்க வைத்து கொள்ள முயற்சித்தது. ஆனால் முடியவில்லை. வடமாநிலங்களில் மோடி அலை, மோடி மேஜிக் பலித்த நிலையில் தென் மாநிலத்தில் பலிக்கவில்லை.
இந்த தேர்தலை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி என்னென்ன செய்தார். எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்தார் என்பதை பார்ப்போம். 7 நாட்கள் கர்நாடகா மாநிலத்தில் மோடி பிரச்சாரம் செய்திருந்தார். அந்த வகையில் 19 மாவட்டங்களில் 18 பொதுக் கூட்டங்களை நடத்தியிருந்தார். 5 முறை திறந்த வாகனத்தில் பிரசாரம் செய்திருந்தார்.

52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் தேர்தல் வெற்றிக்கான வியூகத்தை அமைத்தார். பெங்களூர், பெலகாவி, கல்புர்கி, மைசூரு ஆகிய 4 மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். 2 முறை பெலகாவி மாவட்டத்தில் பொதுக் கூட்டங்களை நடத்தியிருந்தார். 3 நாட்கள் பெங்களூர் பகுதியில் 38 கிலோ மீட்டருக்கு திறந்த வாகனத்தில் பயணம் செய்திருந்தார்.
கர்நாடகாவில் பாஜக வெல்வதற்காக இத்தனை முயற்சிகளை பிரதமர் மோடி எடுத்தும் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. இதை எண்ணி நிர்வாகிகள் வேதனை அடைந்துள்ளனர். எனினும் இந்த தேர்தலில் முழு முடிவுகள் வந்ததும் தோல்விக்கு காரணம் ஆராயப்படும் என பாஜக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications