‛பாஜக எம்எல்ஏ’ ஸ்டிக்கர் ஒட்டிய கார் மோதி 2 பேர் பலி.. பெங்களூரில் பயங்கரம்.. விசாரணையில் ட்விஸ்ட்
பெங்களூரில் பாஜக எம்எல்ஏ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் 3 மோட்டார் சைக்கிள், 2 கார்கள் மீது மோதிய நிலையில் 2 பேர் பலியாகினர். விபத்து நடந்தவுடன் பாஜக எம்எல்ஏ என ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் கிழிக்கப்பட்டது.
பெங்களூர்: பெங்களூரில் பாஜக எம்எல்ஏ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் 4 மோட்டார் சைக்கிள், 2 கார் என மொத்தம் 6 வாகனங்கள் மீது தொடர்ந்து மோதியது. இதில் 2 பேர் பலியான நிலையில் காரில் ஒட்டப்பட்டு இருந்த பாஜக எம்எல்ஏ எனும் ஸ்டிக்கர் கிழிக்கப்பட்டது. இதுபற்றிய விசாரணையில் கார் யாருக்கு சொந்தமானது? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு நகரில் உள்ள நிருபதுங்கா ரோட்டில் நேற்று கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த கார் டிஜிபி அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த ரோட்டில் சென்ற கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. டிரைவரின் கட்டுப்பாட்டை முற்றிலுமாக இழந்த கார், ரோட்டில் சென்ற மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மீது அடுத்தடுத்து மோதின.

2 பேர் பலி
இந்த கார் மொத்தம் 3 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி நின்றது. இதையடுத்து இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது எச்பிஆர் லேஅவுட்டை சேர்ந்த மஜித் கான் (வயது 36), கேஜி ஹள்ளியை சேர்ந்த அய்யப்பா (60) ஆகியோர் இறந்தனர். மற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாஜக எம்எல்ஏ என ஸ்டிக்கர்
இந்நிலையில் தான் விபத்தை ஏற்படுத்திய காரில் பாஜக எம்எல்ஏ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. சிவமொக்கா மாவட்டம் சாகர் சட்டசபை தொகுதி பாஜக எம்எல்ஏ ஹாலப்பாவுக்கு சொந்தமான கார் என தகவல் பரவியது. இதையடுத்து பாஜக எம்எல்ஏவின் கார் மோதி 2 பேர் பலி என்ற செய்திகள் பரவின.இதையடுத்து அந்த காரில் ஒட்டப்பட்டு இருந்த பாஜக எம்எல்ஏ எனும் ஸ்டிக்கர் கிழிக்கப்பட்டது.

டிரைவர் கைது
இதுபற்றி ஹல்சூர் போக்குவரத்து போலீசார் விசாரணையை துவங்கினர். முதற்கட்டமாக கார் ஓட்டிய டிரைவர் மோகனை கைது செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகின. அதாவது அது பாஜக எம்எல்ஏவுக்கு சொந்தமானது இல்லை என்பது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

போலீஸ் கூறுவது என்ன?
இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபரின் பெயர் மோகன். இவர் மதுபானம் குடிக்கவில்லை. இந்த கார் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான ராமு சுரேஷ் என்பவருக்கு சொந்தமானது. இவரது மகன் தான் பாஜக எம்எல்ஏ ஹாலப்பாவின் மகளை திருமணம் செய்துள்ளார். ஹாலப்பாவின் மகள் தற்போது கிம்ஸ்-ல் டாக்டருக்கு படித்து வருகிறார். அவரை அழைத்து வருவதற்காக மோகன் காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த காரில் எம்எல்ஏ உள்பட யாரும் இல்லை'' என்றனர்.












Click it and Unblock the Notifications