பாஜக மெஜாரிட்டியுடன் ஜெயித்து ஆட்சி அமைக்கும்..யார் தயவும் தேவைப்படாது..பசவராஜ் பொம்மை நம்பிக்கை
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று பாஜகவின் மூத்த தலைவரும் கர்நாடக மாநில முதல்வருமான பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்க போவதில்லை என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.எங்களது கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் சொந்த பலத்திலேயே ஆட்சி அமைப்போம் என்றும் உறுதியாக கூறியள்ளார் பசவராஜ் பொம்மை.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாகவே கூறி இருப்பதால், காங்கிரஸ், பாஜக தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். 30 முதல் 32 தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதாதளம் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கூட்டணி குறித்து இதுவரை எந்த கட்சியும் எங்களை தொடர்புகொள்ளவில்லை என்று கூறினார்.
பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம்ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக 2,430 ஆண்களும், 184 பெண்களும், ஒரு திருநங்கையும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர்.
சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்பு வெளியான கருத்து கணிப்பு முடிவுகளுக்கும், அரசியல் சூழ்நிலைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஏனெனில் பாஜக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள நிலை குறித்து, வாக்காளர்களின் மனநிலை பற்றியும் ஏற்கனவே அறிந்து வைத்துள்ளது.
அதன்படி, இந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. எங்களது கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் சொந்த பலத்திலேயே ஆட்சி அமைப்போம். பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் நிலை வராது என்றும் தெரிவித்துள்ளார்.
தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களில் பாஜக வெற்றி பெறும். காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்க போவதில்லை. அதனால் தான் அந்த கட்சியின் தலைவர்கள் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பாகவே வேறு கட்சியுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீதே, அந்த கட்சியின் தலைவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்துவதற்கு உரிமை உள்ளது. அதன்படி, தலைவர்கள் ஆலோசிக்கிறார்கள். இது வழக்கமானது தான். எல்லா கட்சிகளின் தலைவர்களும் கூடி ஆலோசனை நடத்துவது சகஜமானது என்றும் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பசவராஜ் பொம்மை பேட்டி அளித்த சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் கட்சி, தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான மேஜிக் நம்பருடன் முன்னணியில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications