கர்நாடகா பாஜகவில் விரிசல்.. எடியூரப்பாவை முற்றுகையிட்ட சொந்த கட்சியினர்.. யாத்திரை ரத்து.. ஆக்ரோஷம்
கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை முற்றுகையிட்டவர்கள் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மேலிட பொறுப்பாளருமான சிடி ரவியின் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது.
பெங்களூர்: கர்நாடகா பாஜக தலைவர்கள் இடையே சுமூக போக்கு இல்லாமல் விரிசல் ஏற்பட்டுள்ளது சமீபத்தில் தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிக்கமகளூர் மாவட்டம் மூடிகெரே தொகுதியில் விஜய சங்கல்ப் யாத்திரைக்கு தலைமையேற்க சென்ற முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை, பாஜகவினரே முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளரான சிடி ரவியின் ஆதரவாளர்கள் என கூறப்படும் நிலையில் எடியூரப்பா யாத்திரையை ரத்து செய்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே மாதம் தேர்தல் நடக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும் கூட மாநிலத்தில் பிரசாரம் என்பது சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.
மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளும் வியூகங்கள் வகுத்து வருகின்றன. 3 கட்சியினரும் மாநிலம் முழுவதும் யாத்திரைகள் நடத்தி வருகின்றனர்.

விஜய சங்கல்ப் யாத்திரை
பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் விஜய சங்கல்ப யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. சிக்கமகளூர் மாவட்டம் மூடிகெரே சட்டசபை தொகுதியில் இன்று யாத்திரை நடத்த திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த யாத்திரை முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடைபெற இருந்தது. யாத்திரையில் பங்கேற்க எடியூரப்பா இன்று மதியம் ஹெலிகாப்டரில் பிஜிஎஸ் பள்ளியில் வந்திறங்கினார்.

பாஜகவினர் முற்றுகை
இதையடுத்து அவர் மதிய உணவு சாப்பிட்டு விட்டு யாத்திரையில் பங்கேற்க மூடிகெரேவில் உள்ள அய்யபப்பா சுவாமி கோவில் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கேஎம் ரோடு அருகே சென்றபோது எடியூரப்பாவின் காரை பாஜகவினர் திடீரென்று மறித்து முற்றுகையிட்டனர். மேலும் தற்போதைய மூடிகெரே தொகுதி பாஜக எம்எல்ஏ குமாரசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க்கூடாது என கோஷமிட்டனர்.

யாத்திரை ரத்து
மேலும் எடியூரப்பாவின் காரை முற்றுகையிட்டு கோரிக்கை கடிதத்தை கொடுக்க முயன்றனர். ஆனால் கார் முற்றுகையால் எடியூரப்பா கோபமடைந்தார். இதனால் அவர் காரில் இருந்து இறங்காமல் இருந்தார். இருப்பினும் பாஜகவினர் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. தொடர்ந்து மூடிகெரே தொகுதி பாஜக எம்எல்ஏ குமாரசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் கடும் அதிருப்தியடைந்த எடியூரப்பா விஜய சங்கல்ப யாத்திரையை ரத்து செய்தார். விஜய சங்கல்ப யாத்திரையில் பங்கேற்காமல் அவர் சிக்கமகளூர் புறப்பட்டு சென்றார்.

சிடி ரவியின் ஆதரவாளர்கள்
இந்நிலையில் தான் எடியூரப்பாவின் காரை முற்றுகையிட்டவர்கள் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளருமான சிடி ரவியின் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது. முன்னதாக எடியூரப்பா அரசியல் ஓய்வை அறிவித்தபோது அவர் போட்டியிட்ட சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தொகுதியில் மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என அறிவித்தார். இதற்கு சிடி ரவி எதிர்ப்பு தெரிவித்தார். வேட்பாளர் என்பது எடியூரப்பாவின் கிச்சனில் நடக்காது என சிடி ரவி கூறியிருந்தார். இதற்கு எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, சிடி ரவிக்கு பதிலடி கொடுத்து இருந்தார். அரசியலில் எதிரிகள் அதிகரித்தால் வளருவதாக அர்த்தம். பாஜகவுக்கு எடியூரப்பாவின் பங்களிப்பு என்ன? என்பது சிடி ரவிக்கு தெரியும். தேர்தலில் சீட் வழங்குவது குறித்து முடிவு எடியூரப்பாவின் சமையலறையில் முடிவு எடுக்கப்படுவது இல்லை. நான் கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்" என்றார். இது எடியூரப்பா மற்றும் சிடி ரவி தரப்புக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications