சிக்கலில் பிரகாஷ் ராஜ்.. சந்திரயான்-3 திட்டத்தை கேலி செய்வதா? பொங்கிய இந்து அமைப்புகள்..வழக்கு பதிவு
பெங்களூர்: சந்திரயான் 3 விண்கலம் திட்டத்தை கேலி சேய்யும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து அமைப்புகள் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் நாளை நிலவில் தரையிறங்க உள்ளது. நிலவு குறித்த ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல் ஆக இருக்கும் இந்த சந்திரயான் விண்கலம் திட்டம் இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா நிகழ்த்த போகும் இந்த சரித்திர சாதனையை இந்தியாவின் 140 கோடி மக்களும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

கடந்த சில தினங்களாகவே சந்திரயான் 3 விண்கலம் குறித்தே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் அதிகமாக பதிவிடுவதைக் காண முடிகிறது. தற்போது நிலவுக்கு நெருக்கமாக சுற்றி வரும் விக்ரம் லேண்டர் நாளை மாலை 6.04 மணியளவில் தரையிறங்க உள்ளது. நிலவில் முத்திரை பதிக்கும் இஸ்ரோவின் சாதனை குறித்து, அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில், பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், நேற்று தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், "வாவ்... நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம் என கேப்ஷன் பதிவிட்டு ஒருவர் டீ ஆற்றுவது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். #justasking என்ற ஹேஷ்டேக்குடன் இதை பிரகாஷ் ராஜ் பதிவிட்டு இருக்கிறார். நடிகர் பிரகாஷ்ராஜ், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரக்கூடியவர்.
இந்த நிலையில், மோடியை விமர்சிக்கும் விதமாக சந்திரயான் 3 விண்கலம் திட்டத்தை பிரகாஷ் ராஜ் கேலி செய்து இருப்பதாக நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், பிரகாஷ் ராஜ் மீது இந்து அமைப்புகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். கர்நாடகாவின் பகால்கோட் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இந்த புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications