கர்நாடகாவில் கனமழை.. காவிரியில் அதிகரித்த நீர்வரத்து! ஒகேனக்கல்லில் தடை இல்லை.. ஹேப்பி நியூஸ்
பெங்களூர்: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கர்நாடகாவில் காவிரி ஆறு பிறந்து தமிழகத்தின் வழியாக கடலை சேர்கிறது. கடந்த ஒரு வாரமாக கர்நாடகாவில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்க்கிறது.

அதாவது குடகு, மைசூர், மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கேஆர்எஸ் எனும் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல் மேகதாது, கனகபுரா, பிலிகுண்டுலு உள்ளிட்ட வனப்பகுதிகளில் கனமழை பெய்ததால் காவிரியின் துணை நதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கோடை காலத்திலும் காவிரியில் வெள்ளம் பாய்வதை காண முடிகிறது.
கர்நாடக - தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்துக்கு கடந்த 10ம் தேதியில் இருந்து காவிரி நீர் சரிய தொடங்கியது. கடந்த 14ம் தேதி வெறும் 700 கனஅடி தண்ணீர் மட்டுமே காவிரியில் வந்தது. அதன்பிறகு நேற்று முன்தினம் 5 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் அதிகரித்தது. நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து என்பது 4 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.
இந்நிலையில் தான் இன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போதைய சூழலில் ஒகேனக்கல்லில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications