சந்திரயான் 2.. ஆர்வமாக பெங்களூர் வந்த பிரதமர் மோடி.. ஏமாற்றத்துடன் திரும்பினார்!
பெங்களூரு: சந்திராயன் 2 நிலவில் தரையிறங்காத காரணத்தால் பிரதமர் மோடி இஸ்ரோ தலைமையகத்தில் இருந்து பாதியில் வெளியேறினார்.
நிலவில் சந்திரயான் 2 விண்கலம் தரையிறங்குவதை பார்ப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு விமான நிலையம் வந்தார். அவரை கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதையடுத்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் சென்ற பிரதமர் மோடி, அங்கு மாணவர்களுடன் அமர்ந்து இன்று இரவு நிலவில் சந்திரயான் 2 விண்கலம் இறங்குவதை பார்வையிடுகிறார்.
சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் அதிகாலை 1 மணியில் இருந்து 2மணிக்குள் நிலாவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை எந்த நாட்டு விண்கலமும் நிலாவின் தென்துருவப்பகுதியில் தரையிறங்கியது இல்லை என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படுவதாக திட்டமிடப்பட்டு இருந்த சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் சந்திரயான் 2 நிலவில் இறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சந்திரயான் 2ல் இருக்கும் லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ தீவிரமாக முயன்று வருகிறது.
இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், நம்பிக்கையாக இருங்கள். நாடு உங்களை நினைத்து பெருமை கொள்கிறது.நாம் மீண்டும் முயற்சி செய்வோம்.எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
நாம் இந்த பயணத்தை தொடர்வோம்.நான் உங்களுடன் இருக்கிறேன், என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். அதன்பின் அங்கிருந்து உடனடியாக பிரதமர் மோடி வெளியேறினார்.