கர்நாடகாவில் இந்துக்கள் இஸ்லாமியர்கள் இடையே மோதல்! ஷிவமொக்காவில் பரபரப்பு.. போலீஸ் குவிப்பு
பெங்களூர்: கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் இந்து - முஸ்லிம் மதத்தினர் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த பதற்றத்தால் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்க அங்கு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 144 தடை உத்தரவை பிறப்பிப்பது குறித்தும் போலீஸாரும், கர்நாடகா அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதற்றம் நிறைந்த ஷிவமொக்கா
கர்நாடகாவில் சமீபகாலமாக மத ரீதியிலான மோதல் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, வழக்கமாக வட மாநிலங்களில்தான் இதுபோன்ற மத ரீதியிலான மோதலும், கலவரமும் நடைபெறும். ஆனால், தற்போது தென் மாநிலங்களின் ஒன்றான கர்நாடகாவிலும் இதுபோன்ற மோதல்களை அதிகம் காண முடிகிறது. குறிப்பாக, கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டம் அதிக அளவில் மத மோதல்கள் நடைபெறும் பகுதியாக மாறிக்கொண்டு வருகிறது.

தீபாவளியன்று கொலைவெறி தாக்குதல்
இந்நிலையில், தீபாவளி தினமான கடந்த திங்கள்கிழமை இரவு, ஷிவமொக்காவை சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர் மீது ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதலை நடத்தியது. கற்களைக் கொண்டும், இரும்பு ராடுகளையும் கொண்டும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அந்த இளைஞர் படுகாயமடைந்தார். அவர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "ஆர்எஸ்எஸ் குறித்து கொச்சையான வார்த்தைகளை கூறியபடி, அவர்கள் என் மீது தாக்குதல் நடத்தினர்" எனக் கூறியுள்ளார்.

3 பேர் கைது
இதையடுத்து, இந்த விவகாரம் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. பிரகாஷை தாக்கிய நபர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, அவர் மீது தாக்குதல் நடத்திய ஃபைசான், அசார், ஃபராஸ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதில் தாக்குதல் - பதற்றம்
இந்த சூழலில், இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முஸ்லீம் வியாபாரிகள் சிலர் மீது ஒரு கும்பல் பயங்கர தாக்குதலை நடத்தியது. இதில் அப்துல் ரஹ்மான், சையது ரஹீம், முகமது ஷோயிப் ஆகியோர் காயமடைந்தனர். இதனைக் கண்டித்து முஸ்லீம் சமூகத்தினர் அங்கு போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு இருதரப்பு மக்கள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறும் சூழல் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, அங்கு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க ஷிவமொக்கா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவது குறித்தும் காவல்துறையும், கர்நாடகா அரசும் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications