சரவெடி.. கர்நாடகாவில் 34 ஆண்டுகளில் இல்லாத சாதனை.. ரெக்கார்டை நொறுக்கிய காங்கிரஸ்! எப்படினு பாருங்க!
பெங்களூர் : 34 ஆண்டுகளில் இல்லாத வகையில் கர்நாடகாவில் சாதனை வெற்றியைப் பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. கடந்த 1989ஆம் ஆண்டு 178 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி 43.7 வாக்குகளைப் பெற்றிருந்தது. அதன்பிறகு தற்போதுதான் 43 சதவீத வாக்குகளைக் கடந்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 224 இடங்களில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை. காங்கிரஸ் 136 தொகுதிகளில் வெல்லும் நிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியாக இருந்த பாஜக 64 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.

நிலையற்ற அரசுகள் : கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் குறைந்தது 113 சீட்டை பெற வேண்டும். அப்படி பெரும்பான்மை பெறாவிட்டால் தனிப்பெரும் கட்சியாக, மற்ற எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம். பல கட்சிகள் ஒரே அளவில் சீட்களை பெற்றால் மற்ற கட்சிகளுடன் இணைந்து தொங்கு சட்டசபை அமைக்கலாம். இந்த தொங்கு சட்டமன்றம் அதிகமாக நிகழ்ந்த மாநிலம் கர்நாடகா.
1989 சாதனை : காங்கிரஸ் கட்சி கடந்த 1989ல் நடைபெற்ற தேர்தலில் 178 இடங்களைக் கைப்பற்றியது. 1994-ல் மதச்சார்பற்ற ஜனதா தளம் 115 இடங்களில் வென்றது. அதன் பிறகு 1999-ல் காங்கிரஸ் 132 இடங்களில் (வாக்கு சதவீதம் (40.84%) வென்றது. 2004-ல் பாஜக 79 இடங்களையும், 2008-ல் பாஜக 110 இடங்களிலும் வெற்றி பெற்றது. 2013-ல் காங்கிரஸ் கட்சி 122 இடங்களில் வென்றது 2018-ல் பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றது.
1999-க்கு பின் காங்கிரஸ் பெற்ற 132 இடங்களை தாண்டி கர்நாடகாவில் எந்தக் கட்சியும் வெற்றி பெற்றதே இல்லை. இந்நிலையில், அதை முறியடித்து தற்போது 136 இடங்களைக் கைப்பற்றுகிறது காங்கிரஸ் கட்சி. 1989ல் 178 சீட்களைக் கைப்பற்றியதற்குப் பிறகு இதுதான் காங்கிரஸின் அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனையை தகர்த்த காங்கிரஸ் : மேலும், கர்நாடகா தேர்தலில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக இடங்களுடன் அதிக வாக்குகளையும் கைப்பற்றி காங்கிரஸ் சாதனை படைத்துள்ளது. 1989-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 178 இடங்களிலும் (43.76%) வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றது.
34 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 136 இடங்களை கைப்பற்றியுள்ளதோடு 43 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளையும் பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில் வாக்கு சதவீதம் இன்னும் அதிகரிக்கக்கூடும்.
ஆக, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி இதுவரை அதிகபட்சமாக பதிவு செய்த வாக்கு சதவீதத்தை இந்த தேர்தலில் கடந்து பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. இந்த வெற்றி காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உரமூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications