ஜஸ்ட் மிஸ்.. கடும் இழுபறியில் கரையேறிய தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ்!
பெங்களூர் : கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் - பாஜக வேட்பாளர் சப்தகிரி கௌடா இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், தினேஷ் குண்டு ராவ் 105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 36 மையங்களில் வாக்கு என்னும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கர்நாடகாவில் ஆளும் பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 224 தொகுதிகளில் 113ல் வென்றால் தனிப்பெரும்பான்மை என்ற நிலையில், அந்த மேஜிக் நம்பரை கடந்து கம்பீரமாக வெற்றி நடை போட்டு வருகிறது காங்கிரஸ் கட்சி.
தற்போதைய நிலவரப்படி முடிவு அறிவிக்கப்பட்ட 113 தொகுதிகளில் காங்கிரஸ் 68, பாஜக 30, மஜத 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 111 தொகுதிகளில் காங்கிரஸ் 68; பாஜக 34; மஜத 8 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெங்களுரு காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமன தினேஷ் குண்டு ராவ் இன்று காலை தொடக்கத்தில் பின்னடவை சந்தித்து வந்தார். பின்னர், அவர் முந்துவதும், எதிர் வேட்பாளர் முந்துவதுமாக நிலைமை இழுபறியாகச் சென்றது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் தினேஷ் குண்டுராவ், 105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தினேஷ் குண்டு ராவ், 54,118 வாக்குகள் பெற்று, பாஜகவின் சப்தகிரி கௌடாவை 105 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியைத் தனதாக்கியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் வெற்றி பெற்றுள்ள அதேசமயம், தமிழ்நாட்டிற்கான பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications