"போலீஸ் ஒன்னும் கடவுள் கிடையாது.." அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த சித்தராமையா உத்தரவு ரத்து: தீர்ப்பாயம்
பெங்களூர்: ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட நெரிசல் சம்பவத்தில் பெங்களூர் நகரத்தின் காவல்துறை கூடுதல் ஆணையர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் பெங்களூரு நகர காவல் ஆணையர் உட்பட நான்கு அதிகாரிகளை கர்நாடக அரசு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதில் மேற்கு பெங்களூர் நகரத்தின் காவல்துறை கூடுதல் ஆணையரின் இடைநீக்க உத்தரவை 'மத்திய நிர்வாக தீர்ப்பாயம்' ரத்து செய்துள்ளது. போலீஸ்காரர்கள் கடவுளோ, மந்திரவாதியோ கிடையாது என்றும் விசாரணையின்போது தீர்ப்பாயம் கூறியுள்ளது.
மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (Central Administrative Tribunal - CAT) என்பது இந்திய அரசு ஊழியர்களின் பணி தொடர்பான புகார்கள் மற்றும் தகராறுகளைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு சிறப்பு நீதித்துறை அமைப்பாகும். இந்த அமைப்பில்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மேல் முறையீடு செய்திருந்தனர்.

இந்த வழக்கை நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி. கே. ஸ்ரீவஸ்தவா மற்றும் நிர்வாக உறுப்பினர் சந்தோஷ் மெஹ்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரணைக்கு எடுத்தது. வழக்கில் காவல்துறைக்கு ஆதரவாக சிஏடி உத்தரவு பிறப்பித்திருப்பது, கர்நாடக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வழக்கு விசாரணையில் தீர்ப்பாயம் மேலும் கூறியதாவது, "அரசு இடைநீக்க உத்தரவை எந்திரத்தனமாக பிறப்பித்திருக்கிறது. சமூக ஊடக பதிவுகள் மூலம் RCB மக்களை அழைத்ததால், 35,000 பேர் அமரக்கூடிய மைதானத்திற்கு வெளியே 3 முதல் 5 லட்சம் பேர் வரை கூடியிருக்கிறார்கள். காவல்துறையிடம் அனுமதி பெறாமல் அல்லது அவர்களின் சம்மதம் இல்லாமல் லட்சக்கணக்கான மக்களைக் கூட்டியது ஆர்சிபியின் தவறாகவே தெரிகிறது.
மறுபுறம் ஜூன் 4ஆம் தேதி போதிய அவகாசம் இல்லாததால், காவல்துறையினரால் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய முடியவில்லை. காவல்துறைக்கு போதுமான நேரம் கொடுக்கப்படவில்லை. இவ்வளவு பெரிய கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சரியான ஏற்பாடுகளைச் செய்யவும் காவல்துறைக்கு போதுமான நேரம் கொடுக்கப்பட வேண்டும்.
இப்படி நெருக்கடியான நேரத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினரால் எப்படி முடியும்? அவர்கள் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற சக்தியைக் கொண்ட 'கடவுள்' அல்லது 'மந்திரவாதிகள்' அல்ல" என்று தீர்ப்பாயம் கூறியிருக்கிறது. தவறுக்கு காரணம் காட்டி காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தீர்ப்பாயத்தின் உத்தரவு கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications