ஐடி ஊழியருக்கு கொரோனா.. பெங்களூரில் உச்சகட்ட முன்னெச்சரிக்கை.. துவக்க பள்ளிகளுக்கு காலவரையற்ற லீவு
பெங்களூர்: ஐடி ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை அடுத்து பெங்களூரில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பிரச்சினை இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நேற்று இரவு நிலவரப்படி இந்தியாவில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. தமிழகத்தில் சென்னையில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில்தான் பெங்களூரில், 40 வயது மதிக்கத்தக்க ஐடி ஊழியர் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் அமெரிக்கா சென்று விட்டு நாடு திரும்பியுள்ளார். ஊர் திரும்பிய 4 நாள்கள் கழித்து சில அறிகுறிகள் இருந்ததால் டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது அவருக்கு கொரோனா பிரச்சனை இருந்தது தெரியவந்தது.
குடும்பத்திற்கே அறிகுறி
அவரது மனைவி மற்றும் மகள்களுக்கும் அதே போன்ற அறிகுறிகள் இருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு இதுவரை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. எனவே ஒட்டுமொத்த குடும்பமும் தீவிர கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில், அந்த ஊழியர் மட்டும், வில்சன் கார்டன் பகுதியிலுள்ள ராஜீவ்காந்தி நெஞ்சக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது குடும்பத்தார் மற்றும் அவரது டிரைவர், டிரைவரின் குடும்பத்தார் ஆகியோருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை மற்றும் கண்காணிப்பு அளிக்கப்படுகிறது.
பள்ளிகள்
ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் ப்ரீகேஜி எனப்படும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மறு அறிவிப்பு வெளியாகும் வரை விடுமுறை என, திங்கள்கிழமை அறிவிப்பு வெளியானது. பெங்களூரில் ஒருவருக்கு இந்த பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அரசு தீவிர முன்னெச்சரிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது.
ஆரம்ப பள்ளிகள்
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்படுவதாக அரசு தற்போது அறிவித்துள்ளது. எனவே அவர்களது தேர்வுகள் என்னாகும் என்பது தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை. அனைவருமே அடுத்த வகுப்புக்கு பாஸ்
செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முன்னெச்சரிக்கை
இதனிடையே, பிற வகுப்பு மாணவ, மாணவிகள் பள்ளி வகுப்பறைக்குள் நுழையும் முன்பாக சானிடைசர் போட்டு கை கழுவிய பிறகே உள்ளே வர வேண்டும் என பல பள்ளிகளும் உத்தரவிட்டுள்ளன. ஆனால், அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிப்பதுதான் நியாயமாக இருக்கும் என்று, பலரும் அரசுக்கு கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.