பற்றி எரியும் மங்களூர்.. எடியூரப்பா விரைந்தார்.. பொருட்கள் வாங்க 3 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்வு
பெங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் இன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 பிரிவு தளர்த்தப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மாலை 6 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் காவல்துறையினருக்கு எதிராக வியாழக்கிழமை நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை இரவு வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நகர போலீஸ் ஆணையர் பி.எஸ். ஹர்ஷா தெரிவித்தார். ஊரடங்கு உத்தரவால், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் வெளியே வராததால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 3 மணி நேரம் மட்டும் பொதுமக்கள், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க அவகாசம் கொடுக்கப்பட்டது.
இதனிடையே, கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இன்று மங்களூருவுக்கு வருகை தந்துள்ளார். அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்ய உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.
"நான் கோவிந்த் கர்ஜோல் (துணை முதலமைச்சர்) மற்றும் பசவராஜ் பொம்மை (உள்துறை அமைச்சர்) ஆகியோருடன் மங்களூருக்குச் செல்கிறேன். வன்முறைக்கான காரணங்களை தெரிந்துகொள்ள அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்த உள்ளேன் என்று எடியூரப்பா மங்களூருக்குச் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறினார் .
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க இரண்டு நாட்களுக்கு முன்பு பெங்களூரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் இது, டிசம்பர் 21 க்கு அப்பால் நீட்டிக்கப்படாது என்று பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் தெரிவித்துள்ளார்.
"இப்போதைக்கு, அதை நீட்டிக்க எங்களிடம் எந்த திட்டமும் இல்லை, ஆனால் நாங்கள் நிலைமையை கவனிப்போம்" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications