ஆர்சிபி அணியை வாங்குறீங்களா? நான் ஒன்னும் பைத்தியக்காரன் இல்லை... டிகே சிவக்குமார் தந்த ஷாக் பதில்
பெங்களூர்: ‛‛நான் பைத்தியக்காரன் இல்லை. நான் எனது இளமை காலத்தில் கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். அவ்வளவு தான். சொந்த கல்வி நிறுவனங்களை கூட கவனிக்க நேரமில்லாத எனக்கு எதற்கு ஆர்சிபி அணி?'' என டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணியை டிகே சிவக்குமார் சொந்தமாக வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
ஐபிஎல் 18 வது சீசனில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து பெங்களூரில் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். 47 பேர் காயமடைந்தனர்.

இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தினர், ஆர்சிபி அணி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது ஆர்சிபி அணியை ‛யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்' நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த இந்த நிறுவனம் 2016ம் ஆண்டில் ஆர்சிபி அணியை வாங்கியது. டியாஜியோ சார்பில் ஆர்சிபி அணியை ‛யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்' நிறுவனம் வழிநடத்தி வருகிறது. இந்நிலையில் தான் ஆர்சிபி அணியை ‛யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்' நிறுவனம் விற்பனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி ஆர்சிபி அணியை ரூ.16,834 கோடிக்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் ஆர்சிபி அணி விற்பனை தொடர்பான விஷயங்கள் விவாதமாகி உள்ளன.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா மாநில தலைவரும், கர்நாடகா துணை முதல்வருமான டிகே சிவக்குமார் ஆர்சிபி அணியை வாங்க உள்ளதாக தகவல்கள் பரவின. டிகே சிவக்குமார் கர்நாடகாவை சேர்ந்தவர். தற்போது துணை முதல்வர் பொறுப்புடன் பெங்களூர் நகர வளர்ச்சி துறையையும் நிர்வகித்து வருகிறார். அதுமட்டுமின்றி டிகே சிவக்குமார் பெரும் பணக்காரராக உள்ளார். இந்தியாவில் உள்ள எம்எல்ஏக்களில் 2வது பெரிய கோடீஸ்வர எம்எல்ஏ டிகே சிவக்குமார் ஆவார். இவர் கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.1,413 கோடி என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் தற்போது ஆர்சிபி அணி பைனல் விளையாடும் முன்பும் டிகே சிவக்குமார் வீடியோ வெளியிட்டு இருந்தார். ஆர்சிபி அணியின் ஜெர்சி அணிந்து 18 ஆண்டு கனவு இன்று நனவாகிறது. கோப்பை நம்முடையது என்று தெரிவித்து இருந்தார். அதன்பிறகு பைனலில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று கோப்பையுடன் பெங்களூர் வந்திறங்கியபோது நேரில் சென்று வீரர்களுக்கு பூங்கொத்து கொடுத்த டிகே சிவக்குமார் வரவேற்றார். இதனால் தான் ஆர்சிபி அணியை டிகே சிவக்குமார் வாங்க உள்ளதாக தகவல்கள் பரவின.
இதுபற்றி இன்று டிகே சிவக்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டிகே சிவக்குமார், ‛‛நான் பைத்தியக்காரன் இல்லை. நான் எனது இளமை காலத்தில் கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். அவ்வளவு தான். எனக்கு கிரிக்கெட் சங்க நிர்வாக பொறுப்புக்கு கூட ஆஃபர் வந்தது. ஆனால் எனக்கு நேரமில்லை. எனக்கு சொந்தமாக கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதனை கவனிக்க கூட நேரமில்லை. இதனால் அந்த பொறுப்புகளில் இருந்து விலகி எனது குடும்பத்தினரிடம் வழங்கி உள்ளேன். இதனால் எனக்கு எதுக்கு ஆர்சிபி தேவை? நான் ராயல் சேலஞ்ச் மதுவை கூட குடித்தது இல்லை'' என்று கூறினார். இதன்மூலம் ஆர்சிபி அணியை வாங்கவில்லை என்று டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications